குருத்தோலை ஞாயிறையொட்டி விழுப்புரத்தில் கிறிஸ்தவர்கள் ஊர்வலம்

குருத்தோலை ஞாயிறையொட்டி விழுப்புரத்தில் நேற்று கிறிஸ்தவர்கள் குருத்தோலைகளை கைகளில் ஏந்திய படி பவனியாக வந்தனர்.;

Update:2023-04-03 00:30 IST

ஏசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படுவதற்கு முன்பு கடைசி முறையாக ஜெருசலேம் நகருக்கு சென்றார். அந்த காலக்கட்டத்தில் பாலஸ்தீன அரசர்கள் போரில் வெற்றியடைந்து திரும்பும் போது கோவேறு கழுதையின் மேல் அமர்ந்து வருவது வழக்கம்.

அதேபோல் ஏசு கிறிஸ்துவும் கோவேறு கழுதையின் மேல் அமர்ந்து ஜெருசலேம் நகருக்கு சென்றார். அப்போது வழியெங்கும் திரண்டு இருந்த மக்கள் அவரை, ஒலிவமரக் கிளைகளை கைகளில் பிடித்த படி 'தாவீதின் குமாரனுக்கு ஓசன்னா' என்று ஆர்ப்பரித்து வரவேற்றதாக கிறிஸ்தவர்களின் புனித நூலான பைபிளில் கூறப்பட்டுள்ளது.

குருத்தோலை ஞாயிறு

இதன் நினைவாக கிறிஸ்தவர்கள் கொண்டாடுவது தான் குருத்தோலை ஞாயிறு. இதன்படி குருத்தோலை ஞாயிறு விழுப்புரம் கிழக்கு புதுச்சேரி சாலையில் உள்ள சி.எஸ்.ஐ. தூய ஜேம்ஸ் ஆலயத்தில் கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி கிறிஸ்தவர்கள் குருத்தோலைகளை கைகளில் ஏந்தியபடி முக்கிய வீதிகள் வழியாக பாடல்களை பாடிய படி பவனியாக ஆலயத்தை வந்தடைந்தனர்.

இதைத்தொடர்ந்து ஆலயத்தில் சிறப்பு திருப்பலி நடந்தது. இதில் திரளான கிறிஸ்தவா்கள் கலந்து கொண்டு சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். இதேபோல் விழுப்புரம் கிறிஸ்து அரசர் ஆலயம், கீழ்பெரும்பாக்கம் புனித சவேரியார் ஆலயம், டி.இ.எல்.சி. ஆலயம் உள்ளிட்ட பல்வேறு ஆலயங்களில் குருத்தோலை ஞாயிறு கடைபிடிக்கப்பட்டது.

ஈஸ்டர் பண்டிகை

இந்த வாரத்தை புனித வாரமாக கிறிஸ்தவர்கள் கடைபிடிக்கிறார்கள். இதையொட்டி தினமும் கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு ஆராதனைகள் நடைபெற்று வருகிறது. வருகிற 7-ந்தேதி புனித வெள்ளியையொட்டி கிறிஸ்தவ ஆலயங்களில் ஆராதனை நடக்கிறது. இதில் ஏசு கிறிஸ்துவின் பாடு மரணத்தை தியானிக்கும் வகையில் தேவ செய்தி வழங்கப்படும். வருகிற 9-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை ஏசு கிறிஸ்து உயிர்த்தெழுந்ததை நினைவு கூரும் ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்