நவீன குளிர் பதன கிடங்கு திறப்பு
பழைய பாப்பாரப்பட்டியில் வேளாண் வணிகத்துறை சார்பில் ரூ.20 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நவீன குளிர் பதன கிடங்கு திறக்கப்பட்டுள்ளது. இதில் 2000 டன் புளி இருப்பு வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.;
பழைய பாப்பாரப்பட்டியில் வேளாண் வணிகத்துறை சார்பில் ரூ.20 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நவீன குளிர் பதன கிடங்கு திறக்கப்பட்டுள்ளது. இதில் 2000 டன் புளி இருப்பு வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
புளி உற்பத்தி
தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி பகுதியில் 200-க்கும் மேற்பட்ட புளி உற்பத்தியாளர்கள் உள்ளனர். இவர்கள் ஆண்டுதோறும் சீசன் காலங்களில் புளி கொள்முதல் செய்து அதனை பதப்படுத்தி குளிர்பதன கிடங்குகளில் இருப்பு வைத்து விற்பனை செய்து வருகின்றனர். இந்த புளி பதப்படுத்தும் தொழிலில் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் பாப்பாரப்பட்டி பகுதியில் அரசு சார்பில் குளிர் பதன கிடங்கு அமைக்க வேண்டும் என்று விவசாயிகள் மற்றும் புளி உற்பத்தியாளர்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து தமிழ்நாடு அரசு வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை சார்பில் பழைய பாப்பாரப்பட்டி ஒழுங்குமுறை விற்பனை கூட வளாகத்தில் ரூ.20 கோடி மதிப்பீட்டில் நவீன வசதிகருடன் கூடிய குளிர் பதன கிடங்கு கட்டப்பட்டுள்ளது. 2 தளங்களுடன் அதிநவீன குளிர் சாதனங்களுடன் பாதுகாப்பான கிடங்குகள் அமைக்கப்பட்டுள்ளது. சுமார் 2000 டன் புளி மூட்டைகள் இருப்பு வைக்கும் வகையில் இந்தக் கிடங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் பரிவர்த்தனை கூடம், அலுவலக கட்டிடம் உள்ளிட்ட பல்வேறு கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது.
கிடங்கு திறப்பு
இந்த நவீன குளிர்பதன கிடங்கு திறக்கப்பட்டு புளி உற்பத்தியாளர்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை துணை இயக்குனரும், தனி அலுவலருமான பாலசுப்பிரமணியன், செயலாளர் ரவி ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி உற்பத்தியாளர்கள் குளிர் பதன கிடங்கில் புளி மூட்டைகள் இருப்பு வைக்கும் பணியினை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். ஒழுங்குமுறை விற்பனை கூட மேற்பார்வையாளர் பத்மினி, குளிப்பனக்கிடங்கு ஒருங்கிணைப்பாளர் அருண் ஆகியோர் குளிர் பதன கிடங்கில் உள்ள வசதிகள் குறித்து விளக்கி கூறினர்.
இந்த நிகழ்ச்சியில் தர்மபுரி மாவட்ட புளி வணிகர்கள் சங்க செயலாளர் டி.என்.வி.வினுபாஜ்ராஜ், பாப்பாரப்பட்டி பகுதி புளி வணிகர்கள் சங்க தலைவர் சின்னசாமி, செயலாளர் கணபதி, பொருளாளர் முருகேசன் மற்றும் அரசு அலுவலர்கள், புளி உற்பத்தியாளர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.