மின்சாரம் தாக்கி கல்லூரி மாணவர் பலி

களம்பூரில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மின்சாரம் தாக்கி வேலூரை சேர்ந்த கல்லூரி மாணவர் பரிதாபமாக இறந்தார்.;

Update:2023-06-30 16:00 IST

கல்லூரி மாணவர்

வேலூர் தோட்டப்பாளையம் பகுதியைச் சேர்ந்த குமார் என்பவரின் மகன் ஸ்ரீஅருள்குமரன் (வயது 19). இவர் ஆற்காட்டில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம். படித்து வந்தார்.

இவர் கல்லூரியில் படித்துக்கொண்டு திருமணம் மற்றும் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும் இடத்திற்கு காண்டிராக்டர் உதவியுடன் பாப்கார்ன் தயாரித்து கொடுக்கும் வேலையும் செய்து வந்தார்.

இந்த நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த களம்பூரில் இருந்து போளூர் செல்லும் சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் கடந்த 28-ந் தேதி இரவு நடந்த வரவேற்பு நிகழ்ச்சியில் பாப்கார்ன் தயாரித்து கொடுப்பதற்காக ஸ்ரீஅருள் குமரன் சென்றார்.

மின்சாரம் தாக்கி பலி

அப்போது மின்இணைப்பு கொடுக்கும் போது மின்கசிவு காரணமாக மின்சாரம் தாக்கி ஸ்ரீஅருள்குமரன் தூக்கி வீசப்பட்டார்.

உடனடியாக அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்து ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து களம்பூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்