ஏற்காடு மலையில்மோட்டார் சைக்கிள் பள்ளத்தில் கவிழ்ந்து தொழிலாளி சாவு மற்றொருவர் காயம்

ஏற்காடு மலையில் மோட்டார் சைக்கிள் பள்ளத்தில் கவிழ்ந்து தொழிலாளி பலியானார். மற்றொருவர் காயம் அடைந்தார்.

Update: 2023-09-24 20:23 GMT

சேலம்

ஏற்காடு மலையில் மோட்டார் சைக்கிள் பள்ளத்தில் கவிழ்ந்து தொழிலாளி பலியானார். மற்றொருவர் காயம் அடைந்தார்.

மோட்டார் சைக்கிள் கவிழ்ந்தது

சேலம் ஏற்காடு பாரக்கடை கிராமத்தை சேர்ந்தவர் மாதையன் (வயது 55). தொழிலாளி. அதே பகுதியை சேர்ந்தவர் கணேசன். இவர்கள் 2 பேரும் நேற்று மோட்டார் சைக்கிளில் ஏற்காடு சென்றனர். பின்னர் வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்கிக்கொண்டு அவர்கள் திரும்பினர்.ஏற்காடு, வாழவந்தி செல்லும் சாலை ஆர்.கே. எஸ்டேட் அருகே வந்து கொண்டு இருந்தனர். அப்போது ஒரு வளைவில் திரும்ப முடியாமல் சாலை ஓரத்தில் இருந்த தடுப்பு சுவற்றில் மோதி 20 அடி ஆழ பள்ளத்தில் மோட்டார் சைக்கிள் கவிழ்ந்தது. இது குறித்து அந்த வழியாக சென்றவர்கள் ஏற்காடு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தொழிலாளி சாவு

அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். பின்னர் காயம் அடைந்த 2 பேரையும் மீட்டு ஏற்காடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் பலத்த காயம் அடைந்த மாதையனை மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதனை செய்தனர். அப்போது அவர் ஏற்கனவே இறந்தது தெரிந்தது. கணேசனுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதையடுத்து மாதையன் உடலை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரி பிணவறைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்