பள்ளி மாணவன் சாவு

ஓசூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி பள்ளி மாணவன் இறந்தான். இவனது நண்பர் படுகாயம் அடைந்தான்.

Update: 2023-01-24 18:45 GMT

மத்திகிரி

ஓசூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி பள்ளி மாணவன் இறந்தான். இவனது நண்பர் படுகாயம் அடைந்தான்.

லாரி மோதியது

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே பேளகொண்டப்பள்ளியை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மகன் சுதீப் (வயது15). இவன் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்த வந்தான். இவரது நண்பர் நந்தகிஷோர் (15). இவர்கள் 2 பேரும் நேற்று மாலை பள்ளி முடிந்ததும் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்றனர்.

அப்போது தளியில் இருந்து ஓசூர் நோக்கி வந்த லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் மாணவன் சுதீப் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தான். நந்தகிஷோர் படுகாயம் அடைந்தான். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் மாணவனை மீட்டு ஓசூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பெற்றோர் கதறல்

இந்த விபத்து குறித்து மத்திகிரி போலீசாருக்கும், மாணவனின் பெற்றோருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். மாணவனின் உடலை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். தொடர்ந்து போலீசார் மாணவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளி முடிந்து வீடு திரும்பிய மாணவன் விபத்தில் இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்