பாப்பிரெட்டிப்பட்டி:
சேலம் அம்மாபேட்டை குஞ்சான் நகர் சுப்பிரமணி பாரதியார் தெருவைச் சேர்ந்தவர் மன்சூர் அலி (வயது 40). மெக்கானிக். இவர் கடந்த 18 ந்தேதி மோட்டார் சைக்கிளில் சமத்துவபுரம் அருகே வந்து கொண்டு இருந்தார். அப்போது நாய் சாலையின் குறுக்கே சென்றது. அதன் மீது மோட்டார் சைக்கிளை விடாமல் இருக்க பிரேக் போட்டுள்ளார். இதில் நிலைதடுமாறி அவர் கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். அங்கிருந்தவர்கள், அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மன்சூர் அலி நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து பாப்பிரெட்டிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.