'மின் கட்டணத்தை உயர்த்தும் முடிவை உடனடியாக கைவிட வேண்டும்' - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வலியுறுத்தல்

மின்கட்டணத்தை மீண்டும் உயர்த்தும் முடிவை அரசு கைவிட வேண்டும் என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வலியுறுத்தியுள்ளார்.

Update: 2023-06-07 22:03 GMT

சென்னை,

மின்கட்டணத்தை 4.70 சதவீதம் உயர்த்த மின்வாரியம் முடிவு செய்திருப்பதாக வெளியாகி இருக்கும் தகவல் அதிர்ச்சி அளிப்பதாக அ.தி.மு.க. முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவருமான ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;-

"தமிழகத்தில் உள்ள 2 கோடியே 37 லட்சம் மின் நுகர்வோர்கள் பாதிக்கப்படக்கூடிய வகையில் தி.மு.க. அரசு கடந்த செப்டம்பரில் மின் கட்டணத்தை உயர்த்தியது. தமிழகத்தில் 50 லட்சம் சிறு, குறு நிறுவனங்கள் உள்ளது. இதில் ஏறத்தாழ ஒரு கோடி பேர் வேலை செய்கின்றனர்.

கொரோனா காலத்தில் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டு அதில் இருந்து மீண்டு வர முடியாமல் இருக்கும் நிலையில், அதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால் அவர்களுக்கு சுமையை ஏற்படுத்தும் வகையில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. மின் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி, தி.மு.க. அரசுக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி தொடர் போராட்டங்களை நடத்தினார்.

இந்த நிலையில் தற்போது வெந்த புண்ணில் வேல் பாய்சுவது போல் மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வழங்கியுள்ள அனுமதியின்பேரில் அடுத்த மாதம் முதல் மின்கட்டணத்தை 4.70 சதவீதம் உயர்த்த மின்வாரியம் முடிவு செய்திருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. மின் கட்டணத்தை உயர்த்தி 9 மாதங்களே ஆன நிலையில் மீண்டும் கட்டணத்தை உயர்த்த தி.மு.க. அரசு முடிவு செய்துள்ளது.

எதிர் கட்சியாக இருந்தபோது உயர்த்தாத மின் கட்ட ணத்திற்கு எதிராக மு.க.ஸ்டாலின் போராட்டம் நடத்தினார். ஆனால் இன்று அவரது ஆட்சியில் மின் கட்டணத்தை உயர்த்துகிறார். இது நியாயமா? என்பதுதான் தமிழ்நாட்டு மக்களின் கேள்வியாக உள்ளது. எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சராக இருந்த போது மத்திய அரசு அழுத்தம் கொடுத்தும் நிதிசுமை இருந்த போதும் மின் கட்டணத்தை உயர்த்தவில்லை. அதனால் இந்த மின் கட்டணத்தை உயர்வு என்பது மிகவும் அதிர்ச்சியாக உள்ளது. இதை உடனடியாக கைவிட வேண்டும்."

இவ்வாறு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்