அமைச்சர் உதயநிதி குறித்த அவதூறு பதிவு; வழக்கை ரத்து செய்யக்கோரிய பா.ஜ.க. நிர்வாகியின் மனு ஒத்திவைப்பு

பாஜகவை சேர்ந்த அமித் மாளவியா தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதனம் குறித்து பேசியதை திரித்து அவதூறு ஏற்படுத்தும் வகையில் டுவிட்டரில் பதிவிட்டார்.

Update: 2023-10-10 13:52 GMT

மதுரை,

புதுடில்லியை சேர்ந்த அமித் மாளவியா என்பவர் பாரதீய ஜனதா கட்சியின் தகவல் தொழில்நுட்ப பிரிவின் தலைவராக உள்ளார். இவர் தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதனம் குறித்து பேசியதை திரித்து அவதூறு ஏற்படுத்தும் வகையில் டுவிட்டரில் பதிவிட்டார்.

இந்த பதிவு வட இந்தியாவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. இது குறித்த புகாரின் பேரில், திருச்சி மத்திய குற்றப்பிரிவு போலீசார் அமித் மாளவியா மீது கலவரத்தை தூண்டுதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர்.

இதற்கிடையே, இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி அமித் மாளவியா மதுரை ஐகோர்ட்டு கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி இளங்கோவன் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரருக்கு எதிராக மீது தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நிலுவையில் உள்ளன.

அரசியல் காரணங்களுக்காக வேண்டுமென்றே திரித்து பதிவிட்டுள்ளார். இந்த வழக்கின் விசாரணை நடந்து வருகிறது. எனவே, அவர் மீதான வழக்கை ரத்து செய்யக்கூடாது என்று அரசுத்தரப்பில் வாதிடப்பட்டது. அதனை தொடர்ந்து, இந்த மனு மீதான விசாரணையை வருகிற 31-ந் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்