ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடந்தது.

Update: 2023-01-10 19:05 GMT

பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர்கள் சங்கத்தினர் நேற்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பெரம்பலூர் பழைய பஸ் நிலையம் அருகே காந்தி சிலை முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் பொன்ராஜ் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தின் மாவட்ட செயலாளர் அகஸ்டின் உள்ளிட்டோர் கண்டனம் ெதரிவித்து பேசினர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் நகராட்சி, பேரூராட்சிகளில் பணிபுரியும் ஊழியர்கள் வாழ்வாதாரத்தை பாதிக்கும் அரசாணைகள் 152, 139 ஆகியவற்றை தமிழக அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும். நகராட்சியில் ஒப்பந்த முறையில் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு புதன், ஞாயிற்றுக்கிழமைகளில் பகுதி நேர விடுமுறை வழங்கிட வேண்டும். பண்டிகை நாட்களில் ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்கிட வேண்டும். குறைந்தபட்ச ஊதிய அரசாணைக்கு மாறாக ஊதியத்தை குறைக்கக்கூடாது. மாதம் மாதம் பிடித்தம் செய்த தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியை ஊழியர் கணக்கில் செலுத்திட வேண்டும். தொடர்ந்து பணிபுரியும் ஒப்பந்த தினக்கூலி தூய்மை காவலர்களை நிரந்தரமாக்கிட வேண்டும். கடந்த 7 ஆண்டுகளுக்கு மேலாக ஊதிய உயர்வு வழங்காமல் ஒப்பந்தம் நீட்டிப்பை கைவிட்டு நகராட்சி நிர்வாகமே நேரிடையாக மாவட்ட கலெக்டர் அறிவித்த தினக்கூலி வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற கோரி பல்வேறு கோஷங்களை எழுப்பினர். மேலும், மேற்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்றவில்லையென்றால் வருகிற மார்ச் மாதம் முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக அச்சங்கத்தினர் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்