திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் குவிந்தனர்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நேற்று பக்தர்கள் குவிந்தனர். சுமார் 7 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2023-10-01 19:00 GMT

திருச்செந்தூர்:

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் திகழ்கிறது. இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டுமல்லாமல் வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

இந்த நிலையில் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நேற்று அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது. காலை 10.30 மணிக்கு உச்சி கால அபிஷேகம், தீபாராதனை, மாலையில் சாயரட்சை தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடந்தது.

7 மணி நேரம் காத்திருந்து...

நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதாலும், பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை என்பதாலும் ஏராளமான பக்தர்கள் குடும்பத்துடன் திருச்செந்தூரில் குவிந்தனர்.

அவர்கள் கடலில் புனித நீராடி நீண்ட வரிசையில் சுமார் 7 மணி நேரம் காத்து நின்று சாமி தரிசனம் செய்தனர்.

போக்குவரத்து நெருக்கடி

தற்போது கோவில் வளாகத்தில் மெகா திட்ட பணிகள் நடைபெறுவதால் போதுமான அளவு கார் நிறுத்துவதற்கு வசதி இல்லை. அதனால் பக்தர்கள் வந்த வாகனங்கள் ரதவீதிகள், தெப்பக்குளம் அருகில், டி.பி. ரோடு, பஸ்நிலையம் பகுதிகளில் சாலையின் இருபுறமும் நிறுத்தப்பட்டிருந்தன.

இதனால் திருச்செந்தூர் நகருக்குள் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. போலீசார் ஆங்காங்கே தடுப்புகள் வைத்து போக்குவரத்து நெரிசலை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்