மனைப் பட்டா வழங்கக்கோரி திட்டக்குடி தாலுகா அலுவலகத்தில் தர்ணா போராட்டம்

மனைப் பட்டா வழங்கக்கோரி திட்டக்குடி தாலுகா அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Update: 2022-06-17 17:18 GMT

திட்டக்குடி,

திட்டக்குடி அடுத்த சிறுமங்கலம் கிராமத்தில் எம்.ஜி.ஆர். நகரில் வசிக்கும் அருந்ததியர் சமூகத்தை சேர்ந்த மக்கள் இலவச வீட்டுமனை பட்டா கேட்டு திட்டக்குடி தாலுகா அலுவலகத்தில் மனு அளித்து இருந்தனர். ஆனால் இதுவரைக்கும் மனைப்பட்டா வழங்கப்படவில்லை.

இதையடுத்து இந்திய புரட்சிகர மார்க்சிஸ்ட் கட்சியின் வட்ட செயலாளர் பூவையார் பாண்டியன் மற்றும் மாவட்ட செயலாளர் கோகுலகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் அந்த பகுதியை சேர்ந்த 30-க்கும் மேற்பட்டோர், திட்டக்குடி தாலுகா அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உடன் அவர்களிடம் தாசில்தார் கார்த்திக் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில், ஜமாபந்தியில் வந்து மனு அளிக்குமாறு கூறினார். அதன்பேரில் அவர்கள் போராட்டத்தை கைவிட்டு, கோட்டாட்சியர் ராம்குமாரிடம் மனு அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட அவர் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். இதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்