அரசு, தனியார் பஸ் டிரைவர், கண்டக்டர்களுக்கு இடையே தகராறு

மயிலாடும்பாறை அருகே அரசு, தனியார் பஸ் டிரைவர், கண்டக்டர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது.

Update: 2023-08-04 21:00 GMT

மயிலாடும்பாறையில் இருந்து தேனிக்கு தினமும் காலை 11 மணி அளவில் அரசு டவுன் பஸ் இயக்கப்பட்டு வருகிறது. அந்த பஸ் புறப்படுவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்பாக வருசநாட்டில் இருந்து மயிலாடும்பாறை வழியாக தேனிக்கு தனியார் பஸ் இயக்கப்படுகிறது. தனியார் பஸ்சுக்கு பின்னால் 10 நிமிட இடைவெளியில் அரசு பஸ் இயக்க வேண்டிய நிலையில், கடந்த சில நாட்களாக அரசு பஸ், தனியார் பஸ்சுக்கு முன்னதாகவே இயக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் தனியார் பஸ் ஊழியர்கள் ஆத்திரத்தில் இருந்தனர்.

இந்தநிலையில் நேற்று தனியார் பஸ்சுக்கு முன்னதாக அரசு பஸ் புறப்பட்டு சென்று கொண்டிருந்தது. மயிலாடும்பாறை அருகே தென்பழனி காலனி பகுதியில் அரசு பஸ் வந்தபோது, அங்கு வந்த தனியார் பஸ் ஊழியர் ஒருவர் பஸ்சை மறித்து தகராறு செய்தார். சில நிமிடங்களில் தனியார் பஸ்சும் அங்கு வந்தது. அப்போது 2 பஸ்களின் டிரைவர்களும் தங்களது வாகனங்களை சாலையில் நிறுத்தினர். பின்னர் அரசு பஸ் டிரைவர், கண்டக்டரும், தனியார் பஸ் டிரைவர், கண்டக்டரும் தகராறில் ஈடுபட்டனர். ஒருகட்டத்தில் அரசு பஸ் டிரைவர், திடீரென்று தனது சட்டையை கழற்றி வாக்குவாதம் செய்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் மயிலாடும்பாறை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, தகராறில் ஈடுபட்ட அரசு, தனியார் பஸ் டிரைவர், கண்டக்டர்களை சமரசம் செய்து அனுப்பிவைத்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்