பிரதமர் விட்ட சவாலை ஏற்க முதல்-அமைச்சருக்கு தைரியம் இருக்கிறதா? - குஷ்பு கேள்வி

ராகுல் காந்தி ஏன் அமேதியில் நிற்காமல் ரேபரேலியில் நிற்கிறார்? என்று குஷ்பு கேள்வி எழுப்பி உள்ளார்.

Update: 2024-05-10 07:29 GMT

சென்னை,

காங்கிரஸ் கட்சியின் அயலக பிரிவு தலைவராக இருந்தவர் சாம் பிட்ரோடா. இவர் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்திக்கு ஆலோசகராக இருந்தார். தற்போது, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்திக்கு ஆலோசகராக இருப்பதாக கூறப்படுகிறது.

சாம் பிட்ரோடா சமீபத்தில் தெரிவித்த ஒரு கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. அதில் இந்தியா போன்ற பன்முகத்தன்மை கொண்ட நாட்டை நாம் ஒன்றுபடுத்த முடியும்.  இந்தியாவின் கிழக்கில்  இருப்பவர்கள் சீனர்கள்போல் இருக்கிறார்கள். மேற்கில் இருப்பவர்கள் அரேபியர்கள்போல் இருக்கிறார்கள். வடக்கில் இருப்பவர்கள் வெள்ளையர்கள்போல் தெரிகிறது. தெற்கில் இருப்பவர்கள் ஆப்பிரிக்கர்கள்போல் இருக்கிறார்கள் என்று கூறினார்.

சாம் பிட்ரோடா கருத்து சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், காங்கிரஸ் கட்சி அவரது கருத்துக்கும், தங்களுக்கும் தொடர்பு இல்லை என ஒதுங்கிக்கொண்டது. இதையடுத்து காங்கிரஸ் நிர்வாகியின் சர்ச்சை பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியுடன் உள்ள உறவை முறிக்க தி.மு.க. தயாரா? என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி சவால் விடுத்துள்ளார்.

இந்த நிலையில், இது குறித்து தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

"தமிழின பெருமைகளை காக்க காங்கிரஸ் உடனான உறவுகளை முறித்துக் கொள்வாரா? என்று பிரதமர் மோடி விட்ட சவாலுக்கு பதில் சொல்ல முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தைரியம் இருக்கிறதா?. இந்தியா கூட்டணியில் ராகுல் காந்திதான் வெற்றி பெற்று பிரதமராக வருவார் என்று சொல்லக்கூடியவர்கள்; தமிழகத்தில் ஏன் காங்கிரசால் தனியாக நிற்க முடியவில்லை.

ராகுல் காந்தி ஏன் அமேதியில் நிற்காமல் ரேபரேலியில் நிற்கிறார்?. பிரியங்கா காந்தி ஏன் தேர்தலில் களம் இறங்கவில்லை?. 3 ஆண்டு கால திமுக ஆட்சியில் கொண்டாட ஒன்றுமே இல்லை. தனக்கு தானே கொண்டாடி கொண்டு இருக்கிறார்கள். ஜூன் 4-ம் தேதி தேர்தல் முடிவுகள் தெரிந்து விடும்; நாங்கள் தெளிவாக இருக்கிறோம். 400-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறுவோம். இவ்வாறு அவர் கூறினார்.

Full View

மேலும் செய்திகள்