ஆழியாறு பழைய ஆயக்கட்டில் கால்வாய்கள் தூர்வாரும் பணி மும்முரம்
ஆழியாறு பழைய ஆயக்கட்டு கால்வாய் தூர்வாரும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.;
பொள்ளாச்சி
ஆழியாறு பழைய ஆயக்கட்டு கால்வாய் தூர்வாரும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
தூர்வாரும் பணி
பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாறு அணை மூலம் பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பாசன பகுதிகள் பயன்பெறுகின்றன. இதில் பழைய ஆயக்கட்டு பாசனத்தில் பெரியணை, வடக்கலுர், அரியாபுரம், பள்ளிவிளங்கால், காரப்பட்டி ஆகிய 5 கால்வாய்கள் மூலம் 6400 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
இந்த நிலையில் 2-ம் போக பாசனத்திற்கும் தண்ணீர் திறக்கப்பட்டு, தற்போது மழையின் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையில் கால்வாய் தூர்வாராமல் புதர்மண்டி கிடப்பதால் கடைமடை வரை தண்ணீர் செல்வதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. எனவே கால்வாய்களை தூர்வாரும் பணியை உடனடியாக தொடங்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தினர். இதை தொடர்ந்து தற்போது பொதுப்பணித்துறை மூலம் பழைய ஆயக்கட்டு பாசன கால்வாய்கள் தூர்வாரும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
ஒரு வாரத்தில் பணிகளை முடிக்க திட்டம்
ஆழியாறு பழைய ஆயக்கட்டிற்கு உட்பட்ட 5 கால்வாய்களும் மொத்தம் 63 கிலோ மீட்டர் தூரம் கொண்டது. கால்வாய்கள் புதர்மண்டி கிடந்ததால் கடைமடைக்கு தண்ணீர் கொண்டு செல்ல முடியவில்லை. இதையடுத்து விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று பொதுப்பணித்துறை மூலம் கால்வாய் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. வடக்கலூர், காரப்பட்டி, அரியாபுரம், பள்ளிவிளங்கால் ஆகிய கால்வாய்கள் தூர்வாரும் பணி முடிந்து விட்டது.
தற்போது 16 கிலோ மீட்டர் நீளமுள்ள பெரியணை கால்வாய் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் மழையின் காரணமாக தண்ணீர் தேங்கி நின்றதால் பணிகள் தாமதமானது. தற்போது மழை பொழிவு குறைந்ததால் மீண்டும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இன்னும் ஒரு வாரத்தில் தூர்வாரும் பணியை முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.