ரெயில் முன் பாய்ந்து என்ஜினீயர் தற்கொலை

அடுத்த மாதம் திருமணம் நடக்க இருந்த நிலையில் ரெயில் முன் பாய்ந்து என்ஜினீயர் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-09-22 18:45 GMT

நாகர்கோவில், 

அடுத்த மாதம் திருமணம் நடக்க இருந்த நிலையில் ரெயில் முன் பாய்ந்து என்ஜினீயர் தற்கொலை செய்து கொண்டார்.

என்ஜினீயர்

கன்னியாகுமரி அருகே அகஸ்தீஸ்வரம் ரெயில்வே கேட் பகுதியில் உள்ள தண்டவாளத்தில் நேற்று மதியம் ஒரு வாலிபர் உடல் சிதறிய நிலையில் காயங்களுடன் கிடந்தது. இதனை கண்ட மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இதுகுறித்து நாகர்கோவில் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

முதலில் பிணமாக கிடந்த வாலிபர் யார் என்பது தெரியவில்லை. பின்னர் போலீசார் ரெயில்வே கேட் பகுதியில் நிறுத்தியிருந்த மோட்டார் சைக்கிளை கைப்பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், பிணமாக கிடந்தவர் ஈத்தாமொழி தெற்கு வெள்ளியாவிளை பகுதியை சேர்ந்த ஆதிசுவாமியின் மகன் அருண் பிரசாத் (வயது 34) என்பதும், அவர் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது.

நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில்...

அதாவது அருண் பிரசாத்தின் தந்தை ஆதிசுவாமி ஒரு தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் முதல்வராக இருந்து ஓய்வு பெற்றவர். ஆதி சுவாமிக்கு விஜய லட்சுமி என்ற மனைவியும், அருண் பிரசாத் (34), பிரவீன், பிரதீஷ் என 3 மகன்களும் இருந்தனர். மூத்த மகனான அருண் பிரசாத் மெக்கானிக் என்ஜினீயரிங் முடித்து விட்டு பல இடங்களில் வேலை தேடி வந்தார். ஆனால் படித்த படிப்புக்கேற்ற வேலை அவருக்கு கிடைக்கவில்லை. இதனால் அவர் விரக்தியிலேயே வாழ்ந்து வந்தார்.

இதற்கிடையே அருண் பிரசாத்திற்கு அவரது பெற்றோர் திருமணம் செய்து வைக்கும் நடவடிக்கையில் இறங்கினர். ஆனால் வேலை இன்றி திருமணம் செய்ய அவர் விரும்பவில்லை. எனினும் பெற்றோரின் முடிவுபடி கடந்த சில நாட்களுக்கு முன்பு அருண் பிரசாத்திற்கு இளம்பெண் ஒருவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. அடுத்த மாதம் திருமணமும் நடப்பதாக இருந்தது.

தற்கொலை செய்தது அம்பலம்

இந்தநிலையில் மோட்டார் சைக்கிளில் நேற்று மதியம் வீட்டில் இருந்து புறப்பட்ட அருண் பிரசாத் அகஸ்தீஸ்வரம் ரெயில்வே கேட் பகுதிக்கு சென்றுள்ளார்.

அங்கு மோட்டாா் சைக்கிளை நிறுத்தி விட்டு தண்டவாளத்தில் ஏறி நடந்து சென்று கொண்டிந்தார். அப்போது கன்னியாகுமரியில் இருந்து புனலூர் செல்லும் ரெயில் வந்தது. உடனே அவர் ஓடி சென்று திடீரென ரெயில் முன் பாய்ந்தார். இதில் அவர் உடல் சிதறி பலியானது போலீஸ் விசாரணையில் அம்பலமானது.

மேலும் இந்த சம்பவம் குறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அடுத்த மாதம் திருமணம் நடக்க இருந்த நிலையில் என்ஜினீயர் ரெயிலில் பாய்ந்து தற்கொலை செய்த சம்பவம் உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்