சூளகிரி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் கட்டப்பட்டுள்ளபுதிய விநாயகர் கோவிலில் கற்கள் வைத்து அடைத்ததால் பரபரப்பு

சூளகிரி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் கட்டப்பட்டுள்ள புதிய விநாயகர் கோவிலில் கற்கள் வைத்து அடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-09-14 19:30 GMT

சூளகிரி:

சூளகிரி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் கட்டப்பட்டுள்ள புதிய விநாயகர் கோவிலின் உள்ளே கற்கள் கொட்டி அடைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விநாயகர் கோவில்

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி வட்டார வளர்ச்சி வளாகத்தில் புதிய விநாயகர் கோவில் கட்டப்பட்டுள்ளது. இதற்கு அ.தி.மு.க., பா.ஜனதா, பா.ம.க. உள்ளிட்ட கட்சியினர், பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்தனர். இந்த கோவில் கும்பாபிஷேகத்தை வருகிற விநாயகர் சதுர்த்தி நாளன்று நடத்த வேண்டும் என சூளகிரி ஒன்றிய, மத்திய மண்டல பா.ஜனதா நிர்வாகிகள் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சூளகிரி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.

இதே கோரிக்கையை முன்வைத்தும், கோவிலுக்கு பாதுகாப்பு வழங்ககோரியும் பொதுமக்கள் சார்பில் சூளகிரி தாசில்தார் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.

கற்களால் அடைப்பு

இந்த நிலையில் விநாயகர் கோவிலை அகற்ற வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மற்றும் தி.க. அமைப்பினர் நேற்று மனு கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனை அறிந்து அங்கு வந்த பொதுமக்கள், பா.ஜ.க. உள்ளிட்ட கட்சியினர் அதிகாரிகள் மற்றும் விடுதலை சிறுத்தைகள், தி.க.வினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அனைவரும் அங்கிருந்து சென்றனர்.

இதனை தொடர்ந்து கோவிலின் உள்ளே சாமி பிரதிஷ்டை செய்யும் இடம் கற்கள் வைத்து அடைக்கப்பட்டுள்ளது. அதிகாரிகள் இந்த நடவடிக்கையை செய்ததாக கூறப்படுகிறது. புதியதாக கட்டிய விநாயகர் கோவிலின் உள்ளே கற்கள் கொட்டி அடைக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பாக பேசப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்