கடைகளில் போலி 'கியூ.ஆர்.கோடு ஸ்டிக்கரை' ஒட்டி நூதன முறையில் பண மோசடி - ஊர்க்காவல் படை வீரர் கைது

துரைப்பாக்கம் பகுதியில் கடைகளில் போலி 'கியூ.ஆர்.கோடு ஸ்டிக்கரை' ஒட்டி நூதன முறையில் பண மோசடி செய்த ஊர்க்காவல் படை வீரரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-08-12 01:20 GMT

சென்னையை அடுத்த துரைப்பாக்கம் ஒக்கியம்பேட்டை பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் ஆனந்த் (வயது 32). இவர், தனது வீட்டின் முன் பகுதியில் டிபன் கடை நடத்தி வருகிறார். அங்கு வரும் வாடிக்கையாளர்கள் பணத்தை ஆன்-லைன் மூலம் அனுப்ப 'கியூ.ஆர்.கோடு ஸ்டிக்கரை' கடையில் ஒட்டி இருந்தார்.

கடந்த சில தினங்களாக வாடிக்கையாளர்களிடம் இருந்து 'கியூ.ஆர்.கோடு' மூலம் பணம் பரிமாற்றம் ஆகவில்லை. அதில் மோசடி நடந்து உள்ளதாகவும், தனது கடையில் உள்ள 'கியூ.ஆர்.கோடு' ஸ்டிக்கருக்கு பதிலாக போலியாக வேறொரு 'கியூ.ஆர்.கோடு ஸ்டிக்கரை' ஒட்டி உள்ளதாகவும், அதனால் தனக்கு ரூ.3 ஆயிரம் நஷ்டம் ஏற்பட்டு இருப்பதாகவும் கண்ணகி நகர் போலீசில் ஆனந்த் புகார் அளித்தார். இது குறித்து சைபர் கிரைம் சப்-இன்ஸ்பெக்டர் அய்யப்பன் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் இந்த நூதன மோசடியில் ஈடுபட்டது, கண்ணகி நகரைச் சேர்ந்த ஸ்ரீதர் (21) என்பதும், இவர் திருவான்மியூர் போலீஸ் நிலையத்தில் ஊர்க்காவல் படை வீரராக பணியாற்றுவதும் தெரிந்தது. இவர், கடைகளில் உள்ள 'கியூ.ஆர்.கோடு' ஸ்டிக்கருக்கு மேல் தனது வங்கி கணக்கிற்கு பணம் செல்லும் வகையில் போலியான 'கியூ.ஆர்.கோடு' ஸ்டிக்கரை ஒட்டி பண மோசடி செய்ததையும் ஒப்புக்கொண்டார்.

மேலும் சென்னை மாநகர போலீசில் போலீஸ்காரராக பணியாற்றுவது போல் போலியான அடையாள அட்டையும் வைத்து இருந்தார். இவ்வாறு அடையாறு போலீஸ் நிலைய பகுதிகளில் உள்ள 7 கடைகளில் போலி 'கியூ.ஆர்.கோடு ஸ்டிக்கரை' ஒட்டி மோசடியில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

கண்ணகி நகர் போலீசார் ஸ்ரீதரை கைது செய்து ஆலந்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். அவரிடம் இருந்து ஏராளமான 'கியூ.ஆர்.கோடு ஸ்டிக்கர்கள்', போலி அடையாள அட்டை உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்