காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை:ஒகேனக்கல்நீர்வரத்து அதிகரிப்புவிவசாயிகள் மகிழ்ச்சி

Update: 2023-09-22 19:30 GMT

பென்னாகரம்:

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்ததால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தண்ணீர் திறப்பு

தென்மேற்கு பருவமழை இந்தாண்டு போதிய அளவு பெய்யவில்லை எனக்கூறி கர்நாடக அரசு அங்குள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் திறக்கப்படும் தண்ணீரின் அளவை நாளுக்கு நாள் குறைத்து வருகிறது. இதன் காரணமாக தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அவ்வப்போது அதிகரித்தும், குறைந்தும் வருகிறது.

இதனிடையே கர்நாடகாவில் உள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து வினாடிக்கு 4 ஆயிரத்து 673 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. மேலும் கர்நாடக, தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நேற்று முன்தினம் கனமழை பெய்தது. இதனால் ஒகேனக்கல்லுக்கு நேற்று முன்தினம் வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது.

நீர்வரத்து அதிகரிப்பு

இந்தநிலையில் நேற்று முன்தினம் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான அஞ்செட்டி, நாட்றாம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. இதன் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரிக்க தொடங்கியது. அதன்படி நேற்று காலை 8 மணி நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது.

இந்த நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் ஒகேனக்கல் மெயின் அருவி, ஐந்தருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. இதனால் சுற்றுலா பயணிகள் மெயின் அருவியில் குளித்து மகிழ்ந்தனர். மேலும் அவர்கள் காவிரி ஆற்றில் உற்சாகமாக பரிசலில் சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்