செம்மஞ்சேரியில் 2 மாத குழந்தையை சுவரில் அடித்துக்கொன்ற தந்தை கைது

செம்மஞ்சேரியில் 2 மாத குழந்தையை சுவரில் அடித்துக்கொன்ற தந்தை கைது செய்யப்பட்டார்.

Update: 2023-03-31 09:19 GMT

காதல் திருமணம்

சோழிங்கநல்லூரை அடுத்த செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பை சேர்ந்தவர் கவுசல்யா (வயது 23). இவரும் காஞ்சீபுரம் பகுதியை சேர்ந்த ரஞ்சித்குமார் (வயது 24) என்பவரும் பல ஆண்டுகளாக காதலித்து வந்தனர். ரஞ்சித் குமார் கூட்டுறவு கடன் வங்கியில் கடன் வழங்கும் பிரிவில் வேலை பார்த்து வந்தார். திருமணத்துக்கு முன்னரே கவுசல்யா கர்ப்பம் அடைந்தார். இந்த நிலையில் கடந்த 5 மாதத்திற்கு முன்பு இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

இந்த நிலையில் ரஞ்சித்குமார், கவுசல்யா தம்பதிக்கு 2 மாதத்திற்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது. ஆஸ்பத்திரியில் இருந்த கவுசல்யாவை பார்க்க ரஞ்சித் சென்றார். அங்கு கவுசல்யாவை பார்த்து நலம் விசாரிக்கும்போது அவரது உடலில் கை வைத்ததாகவும் கவுசல்யா உடல் வலி அதிகமாக இருக்கிறது என கூறியுள்ளார். இதனால் ரஞ்சித் கோபம் அடைந்து தகராறில் ஈடுபட்டுள்ளார்.

சுவரில் அடித்துக்கொலை

கணவர் ஊரான காஞ்சீபுரத்தில் வசித்து வந்த கவுசல்யாவை அடிக்கடி சந்தேகப்பட்டு ரஞ்சித் அடித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் குழந்தையுடன் கவுசல்யாவை அவரது பெற்றோர் செம்மஞ்சேரிக்கு அழைத்து சென்றனர். நேற்று காலை ரஞ்சித்குமார் செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பில் உள்ள மனைவி வீட்டுக்கு சென்று தன்னுடைய வீட்டுக்கு வரும்படி அழைத்தார். அவர் மறுக்கவே மனைவிக்கும் கணவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த ரஞ்சித் கவுசல்யாவை பலமாக தாக்கியுள்ளார். இதில் அவரது தலை மற்றும் காலில் பலத்த காயம் ஏற்பட்டது. ஆத்திரம் தலைக்கு ஏறிய நிலையில் ரஞ்சித்குமார் வீட்டில் தூங்கி கொண்டிருந்த 2 மாத குழந்தையின் காலை பிடித்து சுவரில் அடித்ததாக தெரிகிறது.

இதில் படுகாயம் அடைந்த குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. இது குறித்து அக்கம்பக்கத்தினர் செம்மஞ்சேரி போலீசில் புகார் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து ரஞ்சித்தை வீட்டிலேயே கைது செய்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். கவசல்யா அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சை பெற்று தனது 2 மாத குழந்தை உயிரிழந்தது கூட தெரியாமல் உறவினர் வீட்டில் உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்