முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. மீதான வழக்கு விசாரணை 26-ந் தேதிக்கு ஒத்திவைப்பு

பெண் அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. மீதான வழக்கு விசாரணை 26-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Update: 2023-05-22 18:45 GMT

பெண் ஐ.பி.எஸ். அதிகாரி ஒருவருக்கு முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. பாலியல் தொல்லை அளித்ததாக தொடரப்பட்ட வழக்கு விசாரணை விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இவ்வழக்கில் அரசு தரப்பில் சாட்சிகளாக சேர்க்கப்பட்ட 68 சாட்சிகளின் விசாரணை கடந்த மாதம் 13-ந் தேதியன்று நிறைவடைந்துள்ளதால் தற்போது இவ்வழக்கு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

இந்நிலையில் நேற்று இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது செங்கல்பட்டு மாவட்ட முன்னாள் போலீஸ் சூப்பிரண்டு ஆஜராகினார். முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. ஆஜராகவில்லை. அவர் ஆஜர் ஆகாததற்கான காரணம் குறித்து மனுதாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து, அரசு தரப்பில் வக்கீல் வைத்தியநாதன் ஆஜராகி, இவ்வழக்கில் குற்றச்சாட்டுகள் தொடர்பாக அரசு தரப்பு சாட்சிகள் அளித்துள்ள சாட்சியங்கள் குறித்தும், அந்த குற்றச்சாட்டுகள் அரசு தரப்பில் எந்த வகையில் நிரூபணம் செய்யப்பட்டுள்ளது என்பது குறித்தும் வாதிட்டார். பின்னர் செங்கல்பட்டு மாவட்ட முன்னாள் போலீஸ் சூப்பிரண்டு தரப்பு வக்கீல் ஆஜராகி தங்கள் தரப்பு வாதத்தை முன்வைத்தார். இதையடுத்து இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி புஷ்பராணி, இவ்வழக்கின் விசாரணையை வருகிற 26-ந் தேதிக்கு (வெள்ளிக்கிழமை) ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்