திருவள்ளூர் ரெயில் நிலையத்தில் ரெயிலில் தொங்கியபடி கலாட்டா; கல்லூரி மாணவர்கள் 2 பேர் கைது

திருவள்ளூர் ரெயில் நிலையத்தில் ரெயிலில் தொங்கியபடி கலாட்ட செய்த கல்லூரி மாணவர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-10-17 11:34 GMT

போலீசார் கண்காணிப்பு

சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்திலிருந்து திருவள்ளூர், அரக்கோணம், திருத்தணி வரையில் செல்லும் மின்சார புறநகர் ரெயிலில் கல்லூரி மாணவர்கள் அவ்வப்போது படிக்கட்டுகளில் தொங்கியபடியும், பாட்டு பாடி ரகளையில் ஈடுபட்டும் ரெயில் பயணிகளை அச்சுறுத்தி வந்தனர்.

இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரெயில் பயணிகள் கோரிக்கை வைத்தனர். அதனைத் தொடர்ந்து திருவள்ளூர் ரெயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் செபாஸ்டின் மற்றும் போலீசார் திருவள்ளூர் ரெயில் நிலையத்தில் தினந்தோறும் கண்காணிப்பு பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள்.

2 மாணவர்கள் கைது

இந்த நிலையில், நேற்று காலை ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் திருவள்ளூர் ரெயில் நிலையத்தில் கண்காணித்துக் கொண்டிருந்தபோது, சென்னையில் இருந்து திருத்தணி நோக்கி வந்த மின்சார புறநகர் ரெயிலில் வந்த கல்லூரி மாணவர்கள் சார்த்தி (வயது 19) மற்றும் ஷயன்ஷா ஆகிய 2 பேர் படிக்கட்டில் தொங்கியபடி, பாட்டுப் பாடி ரெயில் பயணிகளை அச்சுறுத்தும் வகையில் கலாட்டா செய்து வந்தது தெரிய வந்தது.

இதனைத் தொடர்ந்து போலீசார் மேற்கண்ட கல்லூரி மாணவர்கள் 2 பேரை பிடித்து கைது செய்தனர். மேலும் அவர்களுக்கு ஜாமீன் வழங்கி இனிமேலும் இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடக்கூடாது என அறிவுரை வழங்கி எச்சரித்து அனுப்பினர்.

Tags:    

மேலும் செய்திகள்