கிறிஸ்தவ தேவாலயங்களை பழுதுபார்க்க அரசு நிதியுதவி

கிறிஸ்தவ தேவாலயங்களை பழுதுபார்க்க அரசு நிதியுதவி அளிப்பதாக கலெக்டர் வளர்மதி தெரிவித்துள்ளார்.;

Update:2023-08-10 00:36 IST

தமிழ்நாட்டில் சொந்த கட்டிடங்களில் இயங்கும் கிறிஸ்தவ தேவாலயங்களை பழுதுபார்த்தல் மற்றும் புனரமைத்தல் பணிகள் மேற்கொள்வதற்கு 2016-2017-ம் ஆண்டு முதல் நிதி உதவி வழங்கும் திட்டம் அரசால் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் கூடுதல் பணி மேற்கொள்ளவும், கட்டிடத்தின் வயதிற்கேற்ப மானிய தொகை உயர்த்தியும் வழங்கி அரசு ஆணையிட்டுள்ளது.

மாவட்ட கலெக்டர் தலைமையிலான குழு பெறப்படும் விண்ணப்பங்களை அனைத்து உரிய ஆவணங்களுடன் பரிசீலித்து கிறிஸ்தவ தேவாலயங்களை தல ஆய்வு அடிப்டையில் தேர்வு செய்து உரிய முன்மொழிவுகளுடன் சிறுபான்மையினர் நல இயக்குனருக்கு நிதி உதவி வேண்டி பரிந்துரை செய்யப்படும். நிதி உதவி இரு தவணைகளாக தேவாலயத்தின் வங்கி கணக்கில் மின்னணு பரிவர்த்தனை மூலம் செலுத்தப்படும்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை நேரடியாக தொடர்பு கொள்ளலாம்.

இந்த தகவலை கலெக்டர் வளர்மதி தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்