ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு கவர்னர் விரைவில் ஒப்புதல் - உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி நம்பிக்கை

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு கவர்னர் விரைவில் ஒப்புதல் அளிப்பார் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி நம்பிக்கை தெரிவித்தார். இதுகுறித்து சென்னை தலைமைச்செயலகத்தில் பத்திரிகையாளர்களுக்கு உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அளித்த பேட்டி வருமாறு:-

Update: 2022-11-29 08:33 GMT

உயர்கல்வித்துறையின் ஆய்வு கூட்டம் தொடர்ந்து நடத்தப்படுகிறது. பல்கலைக்கழக துணை வேந்தர்கள், கல்லூரி முதல்வர்கள் பங்கேற்ற ஆய்வு கூட்டம் நடைபெற்றிருந்தது.

இந்த நிலையில் உயர்கல்வித்துறையில் பணியாற்றும் பொறியாளர்களின் ஆய்வு கூட்டம் நடைபெற்று வருகிறது. உயர்கல்வித்துறையின் 382 கட்டிட பணிகளுக்காக ரூ.422.08 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த பணிகள் பற்றி ஆய்வு நடத்தப்பட்டது.

சென்னை மாநில கல்லூரியில் கூட்ட அரங்கம் ரூ.63 கோடி செலவில் கட்டப்படும் என்றும், மாற்றுத்திறனாளிக்கான விடுதியும் அமைக்கப்படும் என்றும் முதல்-அமைச்சர் அறிவித்தார். இவற்றுக்கான திட்ட வரையறையையும், நிதி ஒதுக்கீட்டையும் பெற்று வரும் டிசம்பருக்குள் ஒப்பந்தங்கள் நிறைவேற்றப்பட உள்ளன.

சென்னை ராணிமேரி கல்லூரியில் பி.எச்டி. மாணவியர் விடுதி ரூ.42 கோடி செலவில் கட்டப்படும் என்று முதல்-அமைச்சர் அறிவித்திருந்தார். அந்த பணிகளுக்கான முயற்சிகளும் மும்முரமாக நடைபெறுகிறது.

மேலும், 20 கலைக்கல்லூரிகள் தொடங்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார். மேலும், கட்டிடமே கட்டப்படாமல் இருந்த 6 கல்லூரிகள் என 26 கல்லூரிகளுக்கான கட்டிட பணிகளில் 10 பணிகள் நடைபெறுகின்றன. இன்னும் 10 கட்டிடங்களுக்கான இடங்களை தேர்வு செய்யும் பணி நடைபெறுகிறது. வரும் கல்வி ஆண்டு தொடங்குவதற்குள் இந்த பணிகளை முடிக்க கேட்டுக்கொண்டுள்ளோம்.

ஆன்லைன் ரம்மி தொடர்பான மசோதா குறித்து பேச கவர்னரிடம் சட்டத்துறை அமைச்சர் நேரம் கேட்டிருக்கிறார். ஆனால் அதற்கு கூட அனுமதி கிடைக்காத சூழ்நிலை இருக்கிறது.

இந்த அரசு அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறது. அவசர சட்டத்துக்கு உடனடியாக ஒப்புதல் கிடைத்தது. ஆனால் அதற்கான மசோதாவுக்கு ஒப்புதல் தரப்படவில்லை. அதில் கவர்னர் எழுப்பிய கேள்விகளுக்கு 24 மணி நேரத்தில் அரசு பதில் அளித்த பிறகும் இதுவரை ஒப்புதல் தரப்படவில்லை. என்றாலும், அதற்கு உடனடியாக ஒப்புதல் அளிப்பார் என்று நம்புகிறோம்.

என்ஜினீயரிங் கல்லூரிகளில் எந்த இடங்களையும் காலியாக வைத்திருக்கக்கூடாது என்பதுதான் அடிப்படை நோக்கம். காலியிடங்களில் சேர மாணவர்களிடம் இருந்து விண்ணப்பம் வந்தால் அதை பரிசீலித்து மாணவர்களின் தேவை நிறைவு செய்யப்படும்.

இடமாறுதலுக்கு 580 பேராசிரியர்கள் விண்ணப்பித்துள்ளனர். நிரந்தர பணியில் உள்ள பேராசிரியர்கள்தான் கவுன்சிலிங்கிற்கு வரவேண்டும் என்று முதலில் கூறியிருந்தோம். பின்னர் கவுரவ விரிவுரையாளர்களும் இதற்கான கோரிக்கையை வைத்தனர்.

எனவே பேராசிரியர் கவுன்சிலிங் முடிந்த பிறகு கவுரவ விரிவுரையாளர்களுக்கும் கவுன்சிலிங் நடத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்