சேலம், ஈரோடு உள்பட வட உள்மாவட்டங்களில் 4 தினங்களுக்கு வெப்ப அலை

தமிழ்நாட்டில் வருகிற 1-ந்தேதி வரை வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Update: 2024-04-27 23:46 GMT

சென்னை,

தமிழ்நாட்டில் கோடை காலம் தொடங்கி வெயில் வாட்டி வதைத்து கொண்டு இருக்கிறது. அதிலும் குறிப்பாக சேலம், ஈரோடு உள்ளிட்ட வட உள் மாவட்டங்களில் இயல்பை விட வெப்பம் அதிகமாக உள்ளது. சூரியனின் நேரடி தரிசனத்தால் இந்த பகுதிகள் அனைத்தும் கந்தக பூமியாக மாறியுள்ளது.அக்னி நட்சத்திரம் என்று கூறப்படும் கத்தரி வெயில் தொடங்குவதற்கு முன்னதாகவே வெயிலின் கோரத்தாண்டவத்தை தாங்க முடியவில்லை.

'டிரெய்லரே இப்படி என்றால், மெயின் பிக்சர் எப்படி இருக்குமோ?' என்றெல்லாம் சமூக வலைதளங்களில் கருத்துகள் உலா வருகின்றன. அதற்கேற்றாற்போல், கத்தரி வெயில் தொடங்க இன்னும் ஒரு வாரம் உள்ள நிலையில், இப்போதே 110 டிகிரியை தொடும் அளவுக்கு வெயில் சுட்டெரித்து வருவதை பார்க்க முடிகிறது. இதன் தொடர்ச்சியாக தமிழ்நாட்டில் வருகிற 1-ந்தேதி (புதன்கிழமை) வரை வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படும் என்றே வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருக்கிறது.

அதன்படி, வட உள்மாவட்டங்களில் திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, காஞ்சீபுரம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் இயல்பைவிட 5 டிகிரி செல்சியஸ் அதாவது, 9 பாரன்ஹீட் வரை வெப்பம் அதிகரித்து காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுமட்டுமல்லாமல், வருகிற 1-ந்தேதி வரை மேற்சொன்ன மாவட்டங்களில் வெப்ப அலையும் வீசக்கூடும் எனவும் எச்சரிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் இந்த இடங்களில் காலை 8 மணியில் இருந்தே வெப்பத்தின் தாக்கம் உயரும். பிற்பகல் 2 மணியளவில் வெயில் உக்கிரமாக இருக்கும். ஓரிரு இடங்களில் அதிகபட்சமாக 108 டிகிரி வரையும், அதனைத் தாண்டியும் வெப்பம் பதிவாகலாம் எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்