உயரழுத்த மின்கம்பிகள் அறுந்து விழுந்தன

தார்ப்பாய் சுற்றியதால் தீப்பிடித்து எரிந்து உயரழுத்த மின்கம்பிகள் அறுந்து விழுந்தன சங்கராபுரம் அருகே பரபரப்பு

Update: 2023-07-08 18:45 GMT

சங்கராபுரம்

சங்கராபுரம் பகுதியில் நேற்று மாலை பலத்த காற்றுடன் மழை பெய்தது. சங்கராபுரம் அருகே உள்ள குளத்தூரில் இருந்து வரகூர் செல்லும் பிரிவு சாலையின் அருகே நேற்று மாலை 5 மணியளவில் அங்குள்ள செங்கல் சூளையில் மூடி வைத்திருந்த தார்ப்பாய் காற்றில் பறந்து அருகே உள்ள உயரழுத்த மின் கம்பியில் சுற்றிக்கொண்டது. இதனால் இரு மின்கம்பிகள் ஒன்றோடொன்று உரசியதால் அதில் இருந்து தீப்பொறிகள் பறந்ததை அடுத்து தார்பாய் தீப்பிடித்து எரிந்தது. இதில் 2 உயர் அழுத்த கம்பிகள் அறுந்து கீழே விழுந்தன. ஆனால் நல்லவேளையாக அங்கு அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நிகழவில்லை. தகவலறிந்த மின்வாரிய ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு சென்று உடனடியாக மின் இணைப்பை துண்டித்து விட்டு அறுந்து கிடந்த மின் கம்பிகளை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்