கந்துவட்டி கொடுமையால் விஷம் குடித்த கணவன் சாவு மனைவி உயிர் ஊசல்

கும்மிடிப்பூண்டி அருகே கந்து வட்டி கொடுமையால் தம்பதி விஷம் குடித்த நிலையில், சிகிச்சை பெற்று வந்த கணவர் உயிரிழந்தார். மனைவி உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடி வருகிறார்.

Update: 2023-07-29 08:21 GMT

கும்மிடிப்பூண்டி, 

கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கத்தில் உள்ள பிள்ளையார் கோவில் தெருவில் வாடகை வீட்டில் வசித்து வந்தவர் பிரகாஷ் (வயது 48). இவரது மனைவி சரிதா (40). இவர்களுக்கு திருமணம் ஆகி 14 வருடங்கள் ஆன நிலையில் குழந்தைகள் ஏதும் இல்லை. பிரகாஷ் சொந்தமாக ஒரு காரை வைத்து கொண்டு அதனை வாடகைக்கு ஓட்டி வந்தார்.

இவர் கொரோனா காலகட்டத்தில் ஆரம்பாக்கம் பகுதியை சேர்ந்த ராஜா என்கிற முனுசாமியிடம் ரூ.1 லட்சத்து 10 ஆயிரத்தை வட்டிக்கு கடனாக சிறிது சிறிதாக வாங்கியதாக கூறப்படுகிறது. கடந்த 2 வருட காலமாக வட்டி கொடுத்து வந்த அவரிடம் தற்போது அசலும் வட்டியும் சேர்த்து ரூ.2 லட்சம் கேட்டு ரவுடிகளை வைத்து ராஜா மிரட்டி வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் மன உளைச்சலுக்கு ஆளான பிரகாஷ், நேற்று முன்தினம் இரவு தனது வீட்டை பூட்டி விட்டு ஆரம்பாக்கம் அடுத்த எளாவூரில் உள்ள ஏழுகண் பாலத்திற்கு தனது மனைவியுடன் சொந்த காரில் சென்றார். அங்கு நடுரோட்டில் நின்றவாறு தனக்கு ஏற்பட்ட கந்து வட்டி பிரச்சினை குறித்தும், அதற்கு காரணமானவர்களை குறித்தும், தற்கொலைக்கு யார் காரணம் என்பது குறித்தும் வீடியோ ஒன்றை செல்போனில் பதிவிட்டு அதனை நண்பர்களுக்கு வாட்ஸ்-அப்பில் அனுப்பினார். பின்னர் பிரகாசும், அவரது மனைவி சரிதாவும் சேர்ந்து காரில் அமர்ந்து விஷம் குடித்தனர்.

மேலும் தற்கொலை தொடர்பாக அவர் ஒரு கடிதம் ஒன்றையும் பிரகாஷ் எழுதி வைத்து இருந்தார். இந்த நிலையில் நள்ளிரவில் செல்போன் மூலம் தனது வீட்டின் அருகே உள்ள நண்பர் ஒருவருக்கு விஷம் குடித்தது தொடர்பாக பிரகாஷ் தகவல் தெரிவித்தார்.

இதனையடுத்து அக்கம்பக்கத்தினர் சம்பவ இடத்திற்கு சென்று பிரகாசையும், அவரது மனைவி சரிதாவையும் மீட்டு சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

இரண்டு பேரும் கவலைக்கிடமான நிலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பிரகாஷ் நேற்று மாலை பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து இன்ஸ்பெக்டர் தமிழ்ச்செல்வி தலைமையில் ஆரம்பாக்கம் போலீசார் ராஜா மற்றும் நியாஸ் ஆகிய 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்து தலைமறைவான அவர்களை தேடிவருகின்றனர். கந்து வட்டி கொடுமையால் பாதிக்கப்பட்ட கணவன், மனைவி விஷம் குடித்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்