கோவையில் கல்லூரிகளுக்கு நேரில் சென்று மாணவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படும்- அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி
கோவையில் கல்லூரிகளுக்கு நேரில் சென்று மாணவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார்.;
கோவையில் கல்லூரிகளுக்கு நேரில் சென்று மாணவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார்.
ஆய்வு கூட்டம்
கோவை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை தொடர்பாக அனைத்து அரசு மருத்துவ கல்லூரி முதல்வர்களுடனான ஆய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், செந்தில் பாலாஜி ஆகியோர் தலைமை தாங்கினர். மக்கள் நல்வாழ்வு துறை அரசு முதன்மை செயலாளர் செந்தில்குமார், கலெக்டர் சமீரன், மருத்துவ கல்வி கழக இயக்குனர் நாராயண பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதனை தொடர்ந்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் 2008-ம் ஆண்டு முதல்-அமைச்சராக இருந்த கருணாநிதி தான் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கென தனியாக ஒரு ஆணையத்தினை தொடங்கி வைத்தார். இந்த ஆணையம் தோற்றுவிக்கப்பட்ட முதல் இன்று வரை மூளைச்சாவு அடைந்த 1,524 பேரிடம் இருந்து உறுப்புகள் தானமாக பெறப்பட்டு உள்ளது.
குரங்கு அம்மை
தமிழகத்தில் இதுவரை குரங்கு அம்மை பாதிப்பு கண்டறியப் படவில்லை. கிண்டியில் குரங்கு அம்மை பாதிப்பு தொடர்பாக ஆய்வு செய்ய ஒரு ஆய்வு கூடத்திற்கு அனுமதி பெறப்பட்டு உள்ளது. இனி பரிசோதனை மாதிரிகள் புனேவிற்கு அனுப்ப வேண்டியது இல்லை.
தமிழகத்தில் பூஸ்டர் கொரோனா தடுப்பூசி 3 கோடியே 87 லட்சத்து 84 ஆயிரத்து 323 நபர்களுக்கு போட வேண்டும். ஆனால் தற்போது வரை 37 லட்சத்து 33 ஆயிரத்து 950 நபர்களுக்கு போடப்பட்டுள்ளது. 3½ கோடி பேரை இலக்காக வைத்து பூஸ்டர் தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. இதன்படி வருகிற 7-ந் தேதி 50ஆயிரம் இடங்களில் பூஸ்டர் தடுப்பூசி போடும் நடக்கிறது. சென்னையை தொடர்ந்து கோவையிலும் கல்லூரிகளுக்கு நேரில் சென்று மாணவர்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தப்படும்.
மருத்துவதுறையில் உள்ள 4,308 காலி பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கூடுதல் மருத்துவ உபகரணங்கள் ரூ.36.60 லட்சமும், இ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு விபத்து மற்றும் அவசர சிகிச்சை மையத்திற்கு நவீன உபகரணங்கள் வாங்கவும் ரூ.34.5 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மரபியல் மற்றும் மரபுசார் அரியவகை நோய்களுக்காக 3 ஒப்புயர்வுமையங்கள் ரூ.2.73 கோடியில் ஏற்படுத்தப்படவுள்ளது. ரூ.1 கோடி மதிப்பீட்டில் கட்டண மருத்துவ படுக்கைகள், புதிய ரத்த சுத்திகரிப்பு எந்திரம் மற்றும் நவீன உபகரணங்கள் ரூ.13 லட்சம் மதிப்பீட்டிலும், அவசர சிகிச்சை மீட்பு மையம் ரூ.53 லட்சம் மதிப்பீட்டிலும் ஏற்படுத்தப்பட உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.