உழவர்களின் துயரங்கள் விரைவில் தீரும்; அன்புமணி ராமதாஸ்
உழவர்கள் உலகுக்கு உணவு படைக்கும் கடவுள்கள் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.;
தேசிய விவசாயிகள் தினம் ஆண்டு தோறும் டிசம்பர் 23ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று தேசிய விவசாயிகள் தினம் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தேசிய விவசாயிகள் தினத்தில் விவசாயிகளுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,
இந்தியாவில் உழவர்களின் உரிமைகளுக்காக போராடிய மாபெரும் தலைவர் முன்னாள் பிரதமர் சவுத்ரி சரண்சிங்கின் பிறந்தநாளான டிசம்பர் 23ம் தேதி தேசிய உழவர்கள் நாளாக கொண்டாடப்படுகிறது. உலகுக்கு உணவு படைக்கும் கடவுள்களான உழவர்கள் அனைவருக்கும் இந்த நாளில் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஒவ்வொரு ஆண்டும் உழவர் நாள் கொண்டாடப்படும் போதிலும் உழவர்களின் நிலை தான் முன்னேற வில்லை. முன்னேறிய மாநிலம் என்று கூறப்படும் தமிழ்நாட்டில் கடந்த இரு ஆண்டுகளாக வேளாண் துறை எதிர்மறை வளர்ச்சிப் பாதையில் செல்கிறது. உழவர்களின் ஆண்டு சராசரி வருமானம் ரூ.10,804 ஆக குறைந்து விட்டது.
இந்த நிலை மாற்றப்பட வேண்டும்; உழவர்களின் துயரங்கள் அனைத்தும் தீர்ந்து, அவர்களின் வாழ்க்கை ஏற்றம் பெற வேண்டும் என்பது தான் எனது விருப்பம். அடுத்த ஆண்டு உழவர்கள் நாள் கொண்டாடப்படும் போது இந்தக் கனவு நனவாகத் தொடங்கியிருக்கும்.
என தெரிவிக்கப்பட்டுள்ளது.