கறிக்கோழி கொள்முதல் விலை உயர்வு

மீன்பிடி தடை காலம் காரணமாக கறிக்கோழி கொள்முதல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதனால் உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.;

Update:2023-05-25 01:15 IST

பொள்ளாச்சி

மீன்பிடி தடை காலம் காரணமாக கறிக்கோழி கொள்முதல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதனால் உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

கறிக்கோழி உற்பத்தி

தமிழகத்தில் பல்லடம், சுல்தான்பேட்டை, உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி, ஈரோடு, நாமக்கல் உள்பட பல்வேறு இடங்களில் சுமார் 25 ஆயிரம் கறிக்கோழி உற்பத்தி பண்ணைகள் உள்ளன. இந்த பண்ணைகளில் தினமும் சராசரியாக 2 கிலோ எடை உள்ள 15 லட்சம் கறிக்கோழிகள் உற்பத்தி செய்யப்பட்டு, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் ஆந்திரா, கேரளா கர்நாடகா, புதுச்சேரி போன்ற வெளிமாநிலங்களுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.

விலை உயர்வு

கறிக்கோழி பண்ணை கொள்முதல் விலை பல்லடத்தில் உள்ள கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழு (பி.சி.சி.) சார்பில் தினமும் நிர்ணயம் செய்யப்படுகிறது. தற்போது ஒரு கிலோ கறிக்கோழி உற்பத்தி செய்ய உற்பத்தியாளர்களுக்கு சராசரியாக ரூ.95 வரை செலவாகிறது. கடந்த 1-ந் தேதி ஒரு கிலோ கறிக்கோழி பண்ணை கொள்முதல் விலை ரூ.103(உயிருடன்) ஆக இருந்தது. தொடர்ந்து கிலோவிற்கு ரூ.2, ரூ.3 என உயர்ந்து தற்போது கொள்முதல் விலை ரூ.122 ஆக உள்ளது. கடந்த 3 வாரத்தில் கொள்முதல் விலை கிலோவிற்கு ரூ.19 உயர்ந்து உள்ளது. இது உற்பத்தியாளர்களை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது.

மீன்பிடி தடைகாலம்

இதுகுறித்து உற்பத்தியாளர்கள் கூறியதாவது:-

தமிழகத்தில் அடுத்த மாதம்(ஜூன்) 14-ந் தேதி வரை மீன் பிடி தடைகாலம் உள்ளது. இதனால் மீன் வரத்து குறைந்துள்ளது. இதன் எதிரொலியாக அசைவ பிரியர்களின் பார்வை கறிக்கோழி மீது திரும்பி உள்ளதால் நுகர்வு சற்று அதிகரித்து, பண்ணை கொள்முதல் விலை உயர்ந்துள்ளது.

தற்போது கறிக்கோழி இறைச்சி சிக்கன் ஸ்டால்களில் ஒரு கிலோ ரூ.220 முதல் ரூ.240 வரை விற்பனை செய்யப்படுகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்