ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 5 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு

கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடியாக அதிகரித்து உள்ளது.

Update: 2022-07-08 17:06 GMT

பென்னாகரம்:

கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடியாக அதிகரித்து உள்ளது.

கனமழை

தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்ததை தொடர்ந்து கேரள மாநிலத்தில் வயநாடு மற்றும் கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் கிருஷ்ணராஜசாகர் மற்றும் கபினி அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.

அணையின் பாதுகாப்பு கருதி கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து வினாடிக்கு 2 ஆயிரத்து 500 கனஅடி தண்ணீரும், கபினி அணையில் இருந்து வினாடிக்கு 1,500 கனஅடி நீரும் திறந்து விடப்பட்டுள்ளது.

நீர்வரத்து அதிகரிப்பு

இதனால் தர்மபுரி மாவட்ட ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து சற்று அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 4 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது. நேற்று காலை 8 மணி நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 5 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரித்தது. இதனால் மெயின் அருவி, ஐந்தருவி, சினி பால்ஸ் போன்றவற்றில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.

மேலும் காவிரி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. நீர்வரத்தை தமிழக-கர்நாடக மாநில எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.

---

Tags:    

மேலும் செய்திகள்