மக்காச்சோளத்திற்கு மீண்டும் மறைமுக ஏலம்

மக்காச்சோளத்திற்கு மீண்டும் மறைமுக ஏலம் மீண்டும் நடைபெற உள்ளது.

Update: 2022-12-09 19:32 GMT

மறைமுக ஏலம்

பெரம்பலூர் மாவட்டத்தில் நடப்பாண்டில் சுமார் 64 ஆயிரம் எக்டேர் பரப்பளவில் மக்காச்சோளம் பயிரிடப்பட்டுள்ளது. தற்போது அறுவடை நடைபெற இருப்பதால் மக்காச்சோளம் வேளாண் விளை பொருளை பெரம்பலூர் விற்பனைக்குழுவின் கீழ் இயங்கும் பெரம்பலூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் வாரந்தோறும் புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மறைமுக ஏலம் மூலம் விற்பனை செய்திட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி பெரம்பலூர் பகுதியில் உள்ள விவசாயிகள் மறைமுக ஏலத்தில் கலந்து கொண்டு, தங்களால் விளைவிக்கப்பட்டுள்ள வேளாண் விளைபொருளுக்கு நல்ல விலை பெறுவதோடு சரியான எடை, கமிஷன், தரகு இல்லாமல் விற்பனை செய்து பயன்பெறலாம்.

நல்ல விலைக்கு விற்கலாம்

இந்த மறைமுக ஏலத்தில் உள்ளூர் மற்றும் வெளியூர் வியாபாரிகள் கலந்து கொள்ள இருப்பதால், தங்களது விளைபொருளின் தரத்திற்கான விலையை பெறலாம். மறைமுக ஏலத்தில் வைக்கப்படும் வேளாண் விளை பொருட்களை சுத்தம் செய்து, கலவை மற்றும் அயல் பொருட்கள் இல்லாமல் நன்கு நிழலில் உலர்த்தி கொண்டு வந்து, நல்ல விலைக்கு விற்று பயன்பெறலாம்.

மேலும் விவரங்களுக்கு பெரம்பலூர் விற்பனைக்குழு மேற்பார்வையாளரை 8526383325, 9384743940 என்ற செல்போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம். வேளாண் விளை பொருட்களை உலர்த்தி கொள்ள உலர்களம் வசதியும், வேளாண் விளை பொருட்களை இருப்பு வைத்து கொள்வதற்கு நவீன சேமிப்பு கிட்டங்கி வசதியும், குறைந்த வட்டியில் ரூ.3 லட்சம் வரையில் பொருளீட்டுக்கடன் பெறும் வசதியும் உள்ளது என்று கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்