சேலத்தில் ரூ.1 கோடி மதிப்பிலான செல்லாத நோட்டுகள் பறிமுதல்

சேலத்தில் சபீர் என்பவரின் வீட்டிலிருந்து ரூ.1 கோடி மதிப்பிலான செல்லாத பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

Update: 2024-05-24 07:25 GMT

சேலம்,

சேலத்தில் பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்போது, செல்லாதவையாக அறிவிக்கப்பட்ட ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை வைத்திருந்தவரை போலீசார் கைது செய்தனர். மேலும், அவரிடமிருந்து ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான செல்லாத ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

சேலத்தைச் சேர்ந்த சபீர், பாலாஜி மற்றும் கோகுலநாதன் ஆகியோர் கூட்டாக சேர்ந்து ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்துள்ளனர். இந்த நிலையில் கடந்த 2016-ம் ஆண்டு பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்போது, அவர்கள் வசம் சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் இருந்துள்ளன. இந்த ரூபாய் நோட்டுகளை தான் மாற்றிக் கொடுப்பதாக சபீர் கூறி வாங்கியதாக தெரிகிறது. ஆனால் ஆண்டுகள் பல கடந்தும் ரூபாய் நோட்டுகளை சபீர் மாற்றிக் கொடுக்கவில்லை.

இதனிடையே பணத்தை கொடுத்தவர்களில் பாலாஜி என்பவர் உயிரிழந்து விட்டார். பல ஆண்டுகளாகியும் பணத்தை திருப்பிக் கொடுக்காதது குறித்து சபீரிடம் கோகுலநாதன் கேட்டுள்ளார். அப்போது பணம் தன்னிடம் அப்படியே இருப்பதாகவும், அதனை மாற்றுவதற்காக முயற்சி செய்த வகையில் ரூ.1 லட்சத்துக்கு மேல் செலவு செய்துள்ளதாகவும், அந்த பணத்தை கொடுத்துவிட்டு ரூபாய் நோட்டுகளை எடுத்துச் செல்லுமாறு சபீர் கூறியதாக தெரிகிறது.

இதனால் ஆத்திரமடைந்த கோகுலநாதன், வீட்டில் தடை செய்யப்பட்ட கஞ்சா உள்ளிட்ட பொருட்களை பதுக்கி வைத்திருப்பதாக சபீர் மீது அம்மாபேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் சோதனை மேற்கொண்ட போலீசார், சபீரின் வீட்டிலிருந்து ரூ.1 கோடி மதிப்பிலான செல்லாத பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை பறிமுதல் செய்தனர். மேலும், சபீரை கைது செய்த போலீசார் பறிமுதல் செய்த ரூபாய் நோட்டுகளை நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்