ஈரோடு கோட்டை ஈஸ்வரன் கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி பாலக்கால் நடும் விழா- திரளான பக்தர்கள் பங்கேற்பு

ஈரோடு கோட்டை ஈஸ்வரன் கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி பாலக்கால் நடும் விழா நேற்று நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.;

Update:2022-08-12 03:30 IST

ஈரோடு

ஈரோடு கோட்டை ஈஸ்வரன் கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி பாலக்கால் நடும் விழா நேற்று நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

ஈஸ்வரன் கோவில்

ஈரோட்டில் கோட்டை பகுதியில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் 1,200 ஆண்டுகள் பழமையான வாருணாம்பிகை உடனமர் ஆருத்ரா கபாலீஸ்வரர் கோவில் (ஈஸ்வரன்) உள்ளது. இந்த கோவிலில் 800 ஆண்டுகள் பழமையான வன்னிமரம், நடராஜர், 63 நாயன்மார்கள், சனி பகவான், காலபைரவர், சந்திரன் உள்ளிட்ட பரிவார தெய்வங்கள் உள்ளது.

இந்த கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி தேரோட்டம், குருபெயர்ச்சி விழா, 63 நாயன்மார்கள் குருபூஜை, அன்னாபிஷேகம் உள்ளிட்டவை சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த திட்டமிட்டு திருப்பணிகள் கடந்த 2019-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கியது.

புனரமைப்பு பணி

இதில் விமான கோபுரங்களுக்கும், சிற்பங்களுக்கும் வர்ணம் பூசும் பணி, தரைத்தளம் செப்பனிடும் பணி, ஆகம விதிப்படி கருவறை சிற்பங்கள், சிலைகள் மாற்றம் செய்யாமல் புதுப்பிக்கும் பணிகள், கொடி மரத்திற்கு தங்க மூலாம் பூசிய தகடுகள் பொருத்தும் பணி, கோபுர கலசத்திற்கு தங்க மூலாம் பூசும் பணிகள், அன்னதான கூடம், வாகன மடம், வசந்த மண்டபம் புனரமைக்கும் பணிகள் போன்றவை நடந்தது.

இந்த பணிகள் அனைத்தும் நிறைவடைந்து, கோவில் கும்பாபிஷேகத்தை வருகிற செப்டம்பர் மாதம் 8-ந் தேதி நடத்திட இந்து சமய அறநிலையத்துறை உத்தரவிட்டது.

பாலக்கால் நடும் விழா

இந்த நிலையில் ஈஸ்வரன் கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி, கோவில் வளாகத்தில் பாலக்கால் நடும் விழா நேற்று நடந்தது. இதில் வேத மந்திரங்கள் முழங்க, பாலக்கால் நடப்பட்டது. இதையொட்டி திரளான பக்தர்கள் பங்கேற்று மூலவரை வழிபட்டு சென்றனர்.

விழாவில் கோவில் செயல் அலுவலர் ராஜகோபால், அறங்காவலர்கள் குழுவினர் செல்வம், பழனிவேல், தங்கவேல், ராமச்சந்திரன், பரிமளா, விழா கமிட்டி குழு தலைவர் சுப்பிரமணியன், 36-வது வார்டு கவுன்சிலர் பழனியப்பா செந்தில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாட்டினை அருள்நெறி திருக்கூட்டத்தினர் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்