கோவில்பட்டி நகராட்சி தினசரி சந்தையில் ரூ.6.87 கோடியில் புதிய கடைகள் கட்ட முடிவு

கோவில்பட்டி நகராட்சி தினசரி சந்தையில் ரூ.6.87 கோடியில் புதிய கடைகள் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.

Update: 2023-01-24 18:45 GMT

கோவில்பட்டி:

கோவில்பட்டி நகராட்சி கவுன்சிலர்கள் அவசரக் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு தலைவர் கா.கருணாநிதி தலைமை தாங்கினார். ஆணையர் ராஜாராம், துணை தலைவர் ஆர்.எஸ்.ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் நகராட்சி தலைவர், ஆணையாளர் ஆகியோர் கூறுகையில், நகராட்சி பகுதியிலுள்ள வீடுகள், வணிக நிறுவனங்களில் சேகரிக்கப்படும் குப்பைகளை தூய்மை பணியாளர்கள், தளவாடச்சாமான்கள் மற்றும் வாகனங்களை பயன்படுத்தி மக்கும், மக்காத குப்பை என தனித்தனியாக பிரித்து வாங்கி, அதனை உரமாக்கும் மையம், மறுசுழற்சி மையம் மற்றும் கழிவு வளம் மீட்பு மையம் ஆகிய இடங்களுக்கு கொண்டு செல்ல ஒரு டன்னுக்கு ரூ.4,129.59 என நிர்ணயம் செய்வது அனுமதி வழங்கி, 3 ஆண்டுகளுக்கு தனியார் நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. இப்பணியை மேற்கொள்ள நகராட்சிக்கு ஆண்டுக்கு செலவாகும் ரூ.5.99 கோடி அனுமதிக்கப்பட்டது. கோவில்பட்டி நகராட்சிக்கு பசும்பொன் முத்துராமலிங்க தேவர் தினசரி சந்தையில் கலைஞர் நகர மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பழைய கடை கட்டிடங்களை இடித்து விட்டு ரூ.6.87 கோடி மதிப்பில் புதிய கடைகள் கட்டுவது என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கோவில்பட்டி நகராட்சி தினசரி சந்தையில் பழைய கடையை இடித்துவிட்டு புதிதாக கடை கட்டிடங்கள் கட்டுவதற்கு கடந்த 2-ந்தேதி ஒப்பந்ததாரருக்கு பணி உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. தினசரி சந்தையின் கட்டுமான பணி முடிவடையும் வரையில் தற்காலிக சந்தை கோவில்பட்டி நகராட்சி கூடுதல் பஸ்நிலைய வளாகத்தில் நாளை (வியாழக்கிழமை) முதல் செயல்படும் என தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்