தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளதுபா.ஜனதாவால் மட்டுமே வளர்ச்சியை தரமுடியும்:மாநில தலைவர் அண்ணாமலை பேட்டி

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளது பா.ஜனதாவால் மட்டுமே வளர்ச்சியை தரமுடியும் என்று மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Update: 2023-09-04 18:45 GMT

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. பா.ஜனதாவால் மட்டுமே வளர்ச்சியை தர முடியும் என்று மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

2-ம் கட்ட பாதயாத்திரை

பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை 2-ம் கட்ட பாதயாத்திரையை தென்காசி மாவட்டம் ஆலங்குளம் சட்டமன்ற தொகுதியில் நேற்று தொடங்கினார். இதற்காக அவர் நேற்று சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வந்தார்.

அவருக்கு தூத்துக்குடி விமான நிலையத்தில் பா.ஜனதா மாநில துணைத்தலைவர் சசிகலா புஷ்பா, தெற்கு மாவட்ட தலைவர் சித்ராங்கதன் மற்றும் நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பின்னர் பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை நிருபர்களிடம் கூறியதாவது:-

தொடர் தாக்குதல்

தமிழகத்தில் பா.ஜனதா நிர்வாகிகள் மீது தொடர் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. பாளையங்கோட்டையில் நடந்த கொலை வழக்கில் தி.மு.க.வைச் சேர்ந்தவர் கைது செய்யப்பட்டு உள்ளார். அதற்குள் பல்லடத்தில் பா.ஜனதா நிர்வாகி மோகன்ராஜ் மற்றும் அவருடைய உறவினர்கள் என 4 பேர் படுகொலை செய்யப்பட்டு உள்ளனர். இரண்டுக்குமே தி.மு.க.தான் காரணம். இங்கு ஜெகனின் வளர்ச்சி பிடிக்காமல் கொலை செய்துள்ளனர். அங்கு தமிழகத்தை குடிகார மாநிலமாக மாற்றியதன் காரணமாக படுகொலை நடந்துள்ளது.

தமிழத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து உள்ளது. அரிவாள் மட்டும்தான் ரோட்டில் இருக்கிறது. போலீசின் லத்தியும் துப்பாக்கியும் குறைவாக இருக்கிறது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்தியாவுக்காக பேசுவதற்கு முன்பாக தமிழகத்தை பற்றி பேச வேண்டும்.

சமூகநீதி குறித்து...

மோடி சமூகம் குறித்து ராகுல்காந்தி பேசியது போன்று, சனாதனம் குறித்து உதயநிதி ஸ்டாலின் பேசி உள்ளார். வடஇந்தியாவில் எப்படி ராகுல்காந்தி உள்ளாரோ, அதேபோன்று தென்னிந்தியாவுக்கு உதயநிதி ஸ்டாலின் உள்ளார். எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி வரலாறு காணாத தோல்வியை சந்திக்க போகிறது.

சமீபத்திய கருத்துக்கணிப்பில் கூட தேசிய ஜனநாயக கூட்டணி 317 இடங்களில் வெற்றிபெறும் என கூறப்பட்டு உள்ளது. தேர்தல் ஆரம்பித்து பிரதமர் மோடி பிரசாரத்துக்கு வரும்போது 400 இடங்களில் வெற்றி பெறுவது உறுதி.

6 முறை ஆட்சியில் இருந்த பிறகும் சமூக நீதி குறித்து தி.மு.க.வினர் இன்னும் பேசி வருகிறார்கள். ஏன் 5 முறை ஆட்சிசெய்தபோது சமூக நீதியை கொண்டு வர முடியவில்லையா?. 1949-ம் ஆண்டு என்ன பேசினார்களோ, அதனையே ஒருவார்த்தை மாறாமல் பேசிக் கொண்டு இருக்கிறார்கள். உதயநிதி ஸ்டாலின் பேச்சு, இந்தியா கூட்டணியின் 5 சதவீத வாக்குகளை குறைத்துள்ளது.

தென்தமிழகத்தில் வளர்ச்சி

தமிழகத்தின் தைரியமான அரசியல்வாதிகளில் ஒருவரான சீமான், ஒரு பெண் புகார் கொடுத்தவுடன் பயந்து விட்டார். நாங்களும் தி.மு.க.வும் பங்காளி என்கிறார். புகார் கொடுத்த பிறகு சீமான் 2.0 ஆக மாறிவிட்டார். இதனால் அவர் மீது வைத்து இருந்த மரியாதை குறைந்து விட்டது. அவர் தி.மு.க.வை பங்காளி என்று கூறுவார் என்று நினைத்து பார்க்கவில்லை.

தென் தமிழகத்தில் வளர்ச்சி இல்லாததே தொடர் கொலைகள் மற்றும் அடிதடி சம்பவங்களுக்கு காரணமாக அமைகிறது. சாதிய வன்முறைகளும் ஏற்படுகிறது. தி.மு.க அரசுக்கு தென் தமிழகத்தின் மீது அக்கறை இல்லை. தென் தமிழகத்தை கைவிட்டு விட்டார்கள்.

புதிய பார்வை கொண்ட கட்சியாக பா.ஜனதா கட்சி விளங்குகிறது. பா.ஜனதாவால் மட்டுமே தென் தமிழகத்தில் வளர்ச்சியை தர முடியும். அனைத்து கம்பெனிகளையும் தென் தமிழகத்துக்கு கொண்டு வந்தால், இந்தியாவின் வளர்ச்சி மண்டலமாக தென் தமிழகம் திகழும். இங்கு அனைத்து வளமும் உள்ளது.

இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால், கடந்த 2004-ம் ஆண்டு நடந்தது போன்று எம்.பி.க்களுக்கு ஏற்ப மந்திரிசபையை கூறு போடும் நிலை ஏற்படும். இதனால் ஊழல் அதிகரிக்கும். எனவே, மக்கள் நிலையான ஆட்சி அமைய விரும்புகிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்