என்ஜினீயரிங் மாணவரை கொன்ற 2 நண்பர்களுக்கு ஆயுள் தண்டனை

ஓசூரில் என்ஜினீயரிங் மாணவர் கொலையில், 2 நண்பர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து ஓசூர் கோர்ட்டில் பரபரப்பு தீர்ப்பு வழங்கப்பட்டது.

Update: 2022-12-12 18:45 GMT

ஓசூர்

ஓசூரில் என்ஜினீயரிங் மாணவர் கொலையில், 2 நண்பர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து ஓசூர் கோர்ட்டில் பரபரப்பு தீர்ப்பு வழங்கப்பட்டது.

என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்

சென்னை அம்பத்தூரைச் சேர்ந்தவர் ராகவ் (வயது 23). இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் என்ஜினீயரிங் கல்லூரி ஒன்றில் ஆர்க்கிடெக் இறுதி ஆண்டு படித்து வந்தார். இவர் ஓசூரில் பாலாஜி தியேட்டர் அருகில் காமராஜ் காலனி 3-வது கிராசில், அறை எடுத்து தங்கி இருந்தார்.

இந்த நிலையில் கடந்த 5.6.2013 அன்று மாணவர் ராகவ் அறையில் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார். இந்த கொலை சம்பவம் ஓசூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த கொலை தொடர்பாக அன்றைய ஓசூர் துணை போலீஸ் சூப்பிரண்டு கோபி, டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் பால்பாண்டி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

மாணவியுடன் பழக்கம்

அதில், அதே கல்லூரியில் படித்து வந்த மாணவர்களான ஈரோடு டி.வி.கே. தெருவை சேர்ந்த பிரவீன்குமார் (21), மேட்டுப்பாளையம் சிறுமுகை பகுதியை சேர்ந்த பிரணவ் சச்சின் (20) ஆகிய 2 பேரும் சேர்ந்து மாணவர் ராகவை கொலை செய்ததும், அறையில் இருந்த 2 மடிக்கணினிகள் மற்றும் ஒரு செல்போனை எடுத்து சென்றதும் தெரியவந்தது.

மாணவர் பிரவீன்குமார், ஒரு மாணவியுடன் பழகி வந்ததும், அந்த மாணவி அவருடன் இருந்த நட்பை முறித்து கொண்டு ராகவ் உடன் பழகியதால், ஆத்திரத்தில் பிரவீன்குமார், தனது நண்பர் பிரணவ் சச்சினுடன் ராகவ் அறைக்கு சென்று அவரை கழுத்தை அறுத்துக்கொன்றதும் விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து மாணவர்கள் பிரவீன்குமார், பிரணவ் சச்சின் ஆகிய 2 பேரையும் ஓசூர் டவுன் போலீசார் கைது செய்தனர்.

ஆயுள் தண்டனை

இந்த வழக்கு ஓசூர் கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ரோஸ்லின் துரை நேற்று தீர்ப்பு கூறினார். அதன்படி ராகவை கொலை செய்த பிரவீன்குமார், பிரணவ் சச்சின் ஆகிய 2 பேருக்கும் ஆயுள் தண்டனையும், தலா ரூ.1 லட்சம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பு கூறினார். பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் சின்னபில்லப்பா ஆஜராகி வாதாடினார்.

Tags:    

மேலும் செய்திகள்