பாலக்கோடு போலீஸ் நிலையத்தில் கல்லூரி மாணவி காதலனுடன் தஞ்சம்

Update: 2023-01-24 18:45 GMT

பாலக்கோடு:

பாலக்கோடு அருகே உள்ள மாரண்டஅள்ளி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் தெய்வநாதன். இவருடைய மகள் சிவானி (வயது 19). இவர் தர்மபுரியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பி.காம். சி.ஏ. முதலாமாண்டு படித்து வருகிறார். இவருக்கும், மாரண்டஅள்ளியை சேர்ந்த சலூன் கடைக்காரர் தினகரன் (26) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இந்த பழக்கம் காதலாக மாறியது. இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் சிவானியின் பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்தநிலையில் நேற்று காலை காதல் ஜோடியினர் தங்களது வீடுகளை விட்டு வெளியேறினர். பின்னர் அவர்கள் தர்மபுரி குமாரசாமிபேட்டையில் உள்ள விநாயகர் கோவிலில் திருமணம் செய்தனர். தொடர்ந்து சிவானி தனது காதல் கணவருடன் பாதுகாப்பு கேட்டு பாலக்கோடு போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தார். இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் வீரம்மாள் மற்றும் போலீசார் இருவரின் பெற்றோர்களை அழைத்து சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சிவானி தனது காதல் கணவருடன் செல்வதாக போலீசாரிடம் தெரிவித்தார். இதையடுத்து போலீசார் அவரை தினகரனுடன் அனுப்பி வைத்தனர். 

மேலும் செய்திகள்