போலீசார் தாக்கியதில் இறந்த சிறுவன் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு -மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

போலீசார் தாக்கியதில் இறந்த சிறுவன் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு மதுரை ஐகோர்ட்டு உத்தரவு.

Update: 2023-08-25 18:42 GMT

மதுரை,

மதுரையை சேர்ந்த ஜெயா மகன் முத்து கார்த்திக் (வயது 17). இவர் கடந்த 2019-ம் ஆண்டு பொய் வழக்கில் கைது செய்யப்பட்டு எஸ்.எஸ்.காலனி போலீசாரால் தாக்கப்பட்டதில் உயிரிழந்ததாகவும், இந்த வழக்கில் தொடர்புடைய போலீசார் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கவும், ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்கவும், தனது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கவும் உத்தரவிட வேண்டும் என்றும் மதுரை ஐகோர்ட்டில் ஜெயா மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு, நீதிபதி தனபால் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, போலீஸ் காவலில் இருந்தபோது தாக்கப்பட்டதில் ஏற்பட்ட காயத்தால்தான் முத்து கார்த்திக் இறந்துள்ளார் என சி.பி.சி.ஐ.டி. போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். தவறு நடந்துள்ளது என விசாரணையில் தெரிய வந்தாலே இழப்பீடு வழங்கலாம். இதற்காக வழக்கு விசாரணை முடியும் வரை காத்திருக்க வேண்டிய தேவையில்லை. இதற்கு ஆதாரமாக பல உத்தரவுகள் உள்ளன என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

இதையடுத்து நீதிபதி, "போலீஸ் காவலில் இருந்தபோது தாக்கப்பட்டதில் ஏற்பட்ட காயத்தால்தான் மனுதாரரின் மகன் இறந்துள்ளார். எனவே, இழப்பீடாக ரூ.25 லட்சம் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்