வாகைகுளம் அருகே பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் 6 பேர் கைது

வாகைகுளம் அருகே பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-07-11 18:45 GMT

ஸ்ரீவைகுண்டம்:

பெட்ரோல் குண்டு வீச்சு

தூத்துக்குடி மாவட்டம் வாகைகுளம் அருகே உள்ள மீனாட்சிபட்டி பஸ் நிறுத்தம் அருகில் சம்பவத்தன்று இரு தரப்பினருக்கு இடையே தகராறு ஏற்பட்டது. நள்ளிரவில் அந்த பகுதியில் உள்ள தியாகிகளின் படம் மீது ஒரு தரப்பை சேர்ந்தவர்கள் பெட்ரோல் குண்டு வீசினர். இதில் அந்த உருவப்படங்கள் எரிந்து சேதம் அடைந்தது.

இதையடுத்து அந்த பகுதி மக்கள் திரண்டு, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

6 பேர் கைது

இந்த சம்பவம் தொடர்பாக ஸ்ரீவைகுண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். மேலும் இதுதொடர்பாக விசாரணை நடத்தி, அணியாபரநல்லூரைச் சேர்ந்த மகாராஜன், சுதர்சன், செண்பகராஜ், விக்ரமன், சரவணப்பெருமாள், முருகன் ஆகிய 6 பேரை கைது செய்தனர்.

எதிர்தரப்பை சேர்ந்த சுரேஷ், அஜித் என்ற ராமசுப்பிரமணியன், அறிவரசன் ஆகியோர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்து உள்ளனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து அந்த பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்