பிள்ளைகளை பலிவாங்கிய நீட் - இப்போது பெற்றோரையும் மரணக்குழியில் தள்ளுவது மிகுந்த வேதனையைத் தருகிறது: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

தமிழ்நாட்டு மாணவர்களின் கனவை சிதைத்து - உயிரைப்பறிக்கும் நீட்டை ஒழிக்கிற காலம் தொலைவில் இல்லை என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.

Update: 2023-08-14 12:20 GMT

சென்னை,

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில்,

குரோம்பேட்டையைச் சேர்ந்த தம்பி ஜெகதீஸ்வரன் , நீட் தேர்வில் 2 முறை தோல்வியடைந்த விரக்தியில் தற்கொலை செய்து கொண்ட சோகம் மறைவதற்குள், அவருடைய தந்தை செல்வசேகர் அவர்களும் தன்னைத்தானே மாய்த்துக் கொண்டுள்ளார்.

பிள்ளைகளை பலிவாங்கிய நீட் - இப்போது பெற்றோரையும் மரணக்குழியில் தள்ளுவது மிகுந்த வேதனையைத் தருகிறது. குரோம்பேட்டை அரசு மருத்துமவமனையில் செல்வசேகர் அவர்களுடைய திருவுடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தோம். நமக்கே ஆறுதல் தேவை என்ற நிலையில், அவருடைய உறவினர்களைத் தேற்றினோம்.

நீட் ரத்துக்காக இருமுறை தமிழ்நாடு சட்டமன்றத்தில் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டும், அதனை கிடப்பில் போடுவதும், திருப்பி அனுப்புவதும் என்று ஆளுநர் தன் கடமையிலிருந்து தவறியது தான் இந்த தற்கொலைகளுக்கு காரணம்.

தமிழ்நாட்டு மாணவர்களின் கனவை சிதைத்து - உயிரைப்பறிக்கும் நீட்டை ஒழிக்கிற காலம் தொலைவில் இல்லை. இதற்கான தீர்வு 2024 மக்களவைத்தேர்தலுக்குப் பின் நிச்சயம் ஏற்படும். எனவே, மாணவச்செல்வங்கள் தன்னம்பிக்கையுடனும் - மன உறுதியுடனும் இருக்க வேண்டுமென உங்களின் அண்ணனாக கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையை அடுத்த குரோம்பேட்டை குறிஞ்சி நகரைச் சேர்ந்தவர் செல்வம். போட்டோகிராபரான இவருடைய மகன் ஜெகதீஸ்வரன் (வயது 19). சி.பி.எஸ்.இ. பிரிவில் பிளஸ்-2 படித்த ஜெகதீஸ்வரன், 424 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றார்.

மருத்துவ படிப்பில் அதிக ஆர்வம் இருந்ததால் 2 வருடமாக நீட் தேர்வு எழுதினார். ஆனால் தொடர்ந்து 2 முறையும் நீட் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை. இதனால் விரக்தி அடைந்த ஜெகதீஸ்வரன், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனது அறையில் வேட்டியால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மகன் இறந்த துக்கம் தாளாமல் இருந்த செல்வமும் இன்று அதிகாலை தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்