நேர்மையாகவும், கடினமாகவும் உழைத்தால் வக்கீல் தொழிலில் முன்னேறலாம் - ஐகோர்ட்டு தலைமை நீதிபதி அறிவுரை

சட்டப்படிப்பை முடித்த 805 பேருக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கும் நிகழ்ச்சி சென்னை ஐகோர்ட்டு வளாகத்தில் உள்ள அரங்கில் இன்று நடந்தது.

Update: 2022-08-30 16:04 GMT

சென்னை:

சட்டப்படிப்பை முடித்த 805 பேர் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலில் இன்று வக்கீலாக பதிவு செய்தனர். அவர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கும் நிகழ்ச்சி சென்னை ஐகோர்ட்டு வளாகத்தில் உள்ள அரங்கில் இன்று நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு ஐகோர்ட்டு தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி தலைமை தாங்கினார். இந்த நிகழ்ச்சியில் ஐகோர்ட்டு நீதிபதி அனிதா சுமந்த், அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

வக்கீல் பதிவு கமிட்டி தலைவர் கே.பாலு, வக்கீல் பதிவு பிரமாண உறுதிமொழியை வாசித்தார். அதை புதிய வக்கீல்கள் திருப்பிச் சொல்லி, உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

பின்னர் தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி பேசியதாவது:-

நான் 24 ஆண்டுகளாக வக்கீல் தொழில் செய்து, ஐகோர்ட்டு நீதிபதி ஆனேன். தற்போது வரலாற்று சிறப்புமிக்க சென்னை ஐகோர்ட்டின் தலைமை நீதிபதியாக பதவி வகிக்கின்றேன். நான் ஜூனியராக சேர்ந்த சில ஆண்டுகளில் என் சீனியர் வக்கீல் நீதிபதியாகி விட்டார்.

இதனால், நான் வழக்கு இல்லாத நேரத்தில் காலை முதல் மாலை வரை ஒவ்வொரு கோர்ட்டு அறையிலும் உட்கார்ந்து, மூத்த வக்கீல்கள் எப்படி வாதம் செய்கின்றனர்? அதை நீதிபதிகள் எவ்வாறு ஏற்கின்றனர் என்பதை உற்றுநோக்கி கவனித்து, என் திறமையை வளர்த்தேன்.

இளம் வக்கீல்கள் நேர்மையாக இருக்கவேண்டும். குறுகிய காலத்தில், குறுக்கு வழியில் முன்னேற வேண்டும் என்று நினைக்காதீர்கள். அது உங்களுக்கு நேர் எதிர்மறையாக மாறி, வாழ்வை சீரழித்து விடும். நேர்மையாக வக்கீல் தொழில் செய்தால் நன்மதிப்பு கிடைக்கும். நேர்மையாக கடினமாக உழைத்தால் வக்கீல் தொழிலில் முன்னேறலாம்.

Tags:    

மேலும் செய்திகள்