சென்னையில் ஒரு நாள் விட்டு ஒரு நாள் குடிநீர் வினியோகம் - குடிநீர் வாரியம் அறிவிப்பு

சென்னையில் 4 மண்டலங்களில் ஒரு நாள் விட்டு ஒரு நாள் குடிநீர் வினியோகம் செய்யப்படும் என சென்னை குடிநீர் வாரியம் அறிவித்துள்ளது.

Update: 2024-05-22 11:04 GMT

நெம்மேலி,

நெம்மேலியில் உள்ள கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தில் இருந்து நாளொன்றுக்கு 150 மில்லியன் லிட்டர் குடிநீர் தயாரிக்கப்பட்டு வினியோகிக்கப்படுகிறது. இந்தநிலையில், தென்மேற்கு பருவமழை தீவிரமடைவதற்கு முன்னதாக இங்கு பராமரிப்பு பணிகள் நடக்க இருக்கிறது. இதனால் வருகிற 24-ந்தேதி (வெள்ளிக்கிழமை) முதல் அடுத்த மாதம் 2-ந்தேதி வரை 10 நாட்களுக்கு சென்னையில் 4 மண்டலங்களில் ஒரு நாள் விட்டு ஒரு நாள் குடிநீர் வினியோகம் செய்யப்பட உள்ளதாக சென்னை குடிநீர் வாரியம் அறிவித்துள்ளது.

குறிப்பாக 9-வது மண்டலமான சென்னை தேனாம்பேட்டை பகுதியில் உள்ள மந்தைவெளி, மயிலாப்பூர், ராஜா அண்ணாமலைப்புரம், நந்தனம், திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை மற்றும் 13-வது மண்டலமான அடையாறு பகுதிக்கு உட்பட்ட பெசன்ட் நகர், மடிவின்கரை, பேபிநகர், பெரியார் நகர், கருணாநிதி நகர், காஷேத்ரா காலனி, வேளச்சேரி, பள்ளிப்பட்டு, திருவள்ளுவர் நகர், ஏ.ஜி.எஸ்.காலனி.

14-வது மண்டலமான பெருங்குடி பகுதிக்கு உட்பட்ட கொட்டிவாக்கம், பெருங்குடி, பாலவாக்கம், காவேரி நகர், திருமலை நகர், பள்ளிகரணை, மடிப்பாக்கம், உள்ளகரம், புழுதிவாக்கம், காமாட்சி காலனி, ஜல்லடியம்பேட்டை மற்றும் 15-வது மண்டலமான சோழிங்கநல்லூர் பகுதியில் உள்ள நீலாங்கரை, சரஸ்வதி நகர், ஒக்கியம்- துரைப்பாக்கம், ஈஞ்சம்பாக்கம், எழில் நகர், கண்ணகிநகர், உத்தண்டி, பனையூர், காரப்பாக்கம், சோழிங்கநல்லூர், செம்மஞ்சேரி மற்றும் தாம்பரம் மாநகராட்சி பகுதிகளுக்கு ஒரு நாள் விட்டு ஒரு நாள் குடிநீர் வினியோகம் செய்யப்பட உள்ளது.

பொதுமக்கள் குடிநீர் வினியோக முறையை கவனத்தில் கொண்டு தேவையான குடிநீரை சேமித்து வைத்து சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். அவசரத் தேவைகளுக்கு லாரிகள் மூலம் (Dial for Water) குடிநீர் பெற்றுக் கொள்ள வாரியத்தின் https//cmwssb.tn.gov.in என்ற இணையதள முகவரியை பயன்படுத்தி பதிவு செய்யலாம். குடிநீர் வினியோகம் எந்தவித தடையும் இன்றி வழக்கம் போல் சீரான முறையில் வழங்கப்படும் என்று சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்