அச்சரப்பாக்கம் அருகே போலி மது ஆலை நடத்திய ஊராட்சி மன்ற தலைவியின் கணவர் கைது

அச்சரப்பாக்கம் அருகே போலி மது ஆலை நடத்திய ஊராட்சி மன்ற தலைவியின் கணவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-02-07 12:33 GMT

போலி மதுபான ஆலை

செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் அருகே உள்ள வடமணிப்பக்கம் ஊராட்சியை சேர்ந்தவர் ஜெயந்தி. ஊராட்சி மன்ற தலைவி. இவரது கணவர் வடிவேலு (47). தி.மு.க. பிரமுகர். கொங்கரைமாம்பட்டில் தொழில் அதிபர் ஒருவருக்கு சொந்தமான அரிசி ஆலையில் போலி மதுபானங்கள் தயாரிப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் சென்னை மத்திய நுண்ணறிவு பிரிவு போலீசார் கொண்ட சிறப்பு குழுவினர் நேற்று முன்தினம் இரவு திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

போலி மதுபான ஆலையை வடிவேலு நடத்தி வந்தது தெரியவந்தது. அங்கு இருந்து 35 லிட்டர் கொள்ளளவு கொண்ட 212 கேன்கள் எரி சாராயம், 5 ஆயிரத்து 40 போலி மதுபான பாட்டில்கள், ஸ்டிக்கர், மூடி, லாரி போன்றவற்றை போலீசார் கைப்பற்றினர்.

கைது

போலி மதுபானங்களை தயாரித்து அச்சரப்பாக்கம் மற்றும் மதுராந்தகம் சுற்று வட்டார பகுதியில் விற்பனை செய்த வடிவேலு மற்றும் அவருக்கு உறுதுணையாக இருந்த முருகன்(45) ஆகியோரை சென்னை நுண்ணறிவு பிரிவு போலீசார் கைது செய்து மதுராந்தகம் மதுவிலக்கு அமல் பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்