பயணிகள் நிழற்குடையை சீரமைக்க வேண்டும்
பயணிகள் நிழற்குடையை சீரமைக்க வேண்டும் என பொன்னானி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
பந்தலூர்,
பந்தலூரில் இருந்து உப்பட்டி, பழைய நெல்லியாளம், குந்தலாடி, முக்கட்டி வழியாக பாட்டவயல் மற்றும் சுல்தான்பத்தேரிக்கு செல்லும் இணைப்பு சாலையில் பொன்னானியில் பயணிகள் நிழற்குடை உள்ளது. இதனை பொன்னானி சுற்றுவட்டார கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள், கேரளாவுக்கு சிகிச்சைக்கு செல்பவர்கள் என பலரும் நிழற்குடையில் காத்திருந்து அரசு பஸ்களில் சென்று வருகின்றனர். இந்த நிழற்குடை பராமரிப்பு இல்லாமல் காணப்படுகிறது. தரைத்தளம் பெயர்ந்தும், மேற்கூரை உடைந்தும் உள்ளது. இதனால் பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் மீது கான்கிரீட்டுகள் விழும் அபாயம் உள்ளது. இதனால் பயணிகள் சாலையோரங்களில் காத்து கிடக்கின்றனர். எனவே, பயணிகள் நிழற்குடையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.