தளி,
அமராவதி அணையில் இருந்து 2- வது நாளாக உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. பஞ்சலிங்க அருவியிலும் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
அமராவதி அணை
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உற்பத்தியாகின்ற நீராதாரங்களை அடிப்படையாகக் கொண்டு அமராவதி அணை கட்டப்பட்டு உள்ளது. அணைக்கு கேரளா மற்றும் தமிழகத்தின் அடர்ந்த வனப்பகுதியில் உற்பத்தியாகின்ற ஆறுகள் மூலமாக நீர்வரத்து ஏற்படுகிறது. அதை ஆதாரமாகக் கொண்டு கரூர் மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் 54 ஆயிரத்து 637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக வனப்பகுதியில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து உள்ளது. இதன் காரணமாக அமராவதி அணைக்கு நீர்வரத்து ஏற்பட்டதால் அணையும் அதன் முழு கொள்ளளவில் நீடித்து வருகிறது. மேலும் கடந்த இரண்டு நாட்களாக பெய்த தொடர் மழையின் காரணமாக அணையில் இருந்து அமராவதி ஆறு மற்றும் பிரதான கால்வாயில் நேற்று 2-வது நாளாக உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அமராவதி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டதையொட்டி கரையோர கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
குளிக்க தடை
அதே போன்று திருமூர்த்திமலை பஞ்சலிங்க அருவியில் நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. இதனால் அருவியில் குளிப்பதற்கு 2- வது நாளாக சுற்றுலா பயணிகளுக்கு கோவில் நிர்வாகம் தடை விதித்துள்ளது. மேலும் அருவிக்கு ஏற்பட்டுள்ள நீர்வரத்தை கோவில் பணியாளர்கள் கண்காணித்து வருகிறார்கள்.