பெண்ணிடம் 15 பவுன் சங்கிலி பறிப்பு வாலிபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

சிவகங்கையில் அதிகாலையில் வீட்டு வாசலில் கோலம் போட்ட பெண்ணிடம் 15 பவுன் சங்கிலியை பறித்து சென்ற வாலிபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2023-10-04 19:00 GMT

தாலி சங்கிலி பறிப்பு

சிவகங்கை வ.உ.சி. தெருவை சேர்ந்தவர் பசுபதி. இவர் நகைக்கடை நடத்தி வருகிறார். இவரது தாயார் ஆண்டாள்(வயது 68). இவர் வழக்கம் போல் நேற்று அதிகாலை 5.30 மணி அளவில் தனது வீட்டு வாசலில் கோலம் போட்டுக் கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக மோட்டார்சைக்கிளில் 2 வாலிபர்கள் வந்தனர். பின்னர் அவர்கள் கோலம் போட்டு கொண்டிருந்த ஆண்டாளின் கழுத்தில் அணிந்திருந்த 15 பவுன் தங்க தாலி சங்கிலியை திடீரென பறித்து கொண்டு மின்னல் வேகத்தில் மோட்டார்சைக்கிளில் தப்பி சென்றனர். இதன் மதிப்பு ரூ.4 லட்சத்து 20 ஆயிரம் ஆகும்.

வாலிபர்களுக்கு வலைவீச்சு

இதனால் அதிர்ச்சி அடைந்த ஆண்டாள் கூச்சலிட்டார். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு விரைந்து வந்தனர். இருப்பினும் மர்மநபர்கள் அங்கிருந்து தப்பி விட்டனர். இதுகுறித்து சிவகங்கை நகர் குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆதி லிங்கபோஸ், சப்-இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜோதிமணி, லியோன்ஜோசப், வாசு ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து நகையை பறித்து சென்ற வாலிபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்