திண்டிவனத்தில்போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தூக்குப்போட்டு தற்கொலைகாரணம் என்ன? போலீசார் விசாரணை

திண்டிவனத்தில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதற்கான காரணம் என்ன ? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Update: 2023-01-24 18:45 GMT


திண்டிவனம், 

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் சேடன் குட்டை பகுதியில் வசித்து வந்தவர் நடராஜன் மகன் முருகன்(வயது 56). இவர் கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு ராணி(51), மேகலா(46) என்று 2 மனைவிகள் உள்ளனர்.

இதில், செஞ்சி தாலுகா திக்காமேடு கிராமத்தில் வசித்து வரும் ராணிக்கு தேன்மோழி(33) என்கிற மகளும், விவேகானந்தன்(31) என்கிற மகனும் உள்ளனர். அதேபோன்று, சேடன்குட்டை பகுதியில் வசிக்கும் மேகலாவுக்கு புவன்(16) என்கிற மகன் உள்ளார். இவர் திண்டிவனத்தில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார்.

தூக்கில் தொங்கினார்

முருகன், சேடன்குட்டையில் தனது 2-வது மனைவி மேகலாவுடன் வசித்து வந்தார். இந்த நிலையில், கடந்த 2 வாரங்களுக்கு முன்பு முருகனின் தாய் இறந்துவிட்டார். மேலும் குடும்ப பிரச்சினை காரணமாகவும், முருகன் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.

நேற்று அதிகாலை முருகன் வீட்டின் படுக்கை அறையில் உள்ள மின்விசிறியில் வேட்டியால் தூக்கிட்டு கொண்டார். இதை பார்த்த அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். அவரை காப்பாற்ற முயன்ற போது, கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது.

இதற்கிடையே சம்பவம் பற்றி அறிந்த திண்டிவனம் போலீசார், விரைந்து வந்து கதவை உடைத்து, முருகனை மீட்டு சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

காரணம் என்ன?

அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகனின் தற்கொலை முடிவுக்கான காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்