தேய்பிறை அஷ்டமியையொட்டி தட்சிணகாசி காலபைரவர் கோவிலில் சிறப்பு பூஜை-பூசணியில் விளக்கேற்றி பெண்கள் வழிபாடு

Update:2022-11-17 00:15 IST

நல்லம்பள்ளி:

தேய்பிறை அஷ்டமியையொட்டி அதியமான்கோட்டை தட்சிணகாசி காலபைரவர் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டு பூசணியில் விளக்கேற்றி வழிபாடு செய்தனர்.

தேய்பிறை அஷ்டமி

தர்மபுரி மாவட்டம் அதியமான்கோட்டையில் பிரசித்தி பெற்ற தட்சிணகாசி காலபைரவர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தேய்பிறை அஷ்டமியையொட்டி நேற்று சிறப்பு பூஜை நடந்தது. அதிகாலை காலபைரவருக்கு 108 வகையான நறுமண பொருட்கள் மற்றும் பல்வேறு வகையான பழங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

தொடர்ந்து 1,008 ஆகம பூஜைகள், வேதபாராயணம் மற்றும் சிறப்பு அர்ச்சனை நடந்தது. பின்னர் சாமிக்கு உபகார பூஜைகளுடன், ராஜ அலங்கார சேவையும், மகா தீபாராதனையும் நடைபெற்றது.

1,008 கிலோ மிளகாய்

இரவு கோவில் வளாகத்தில் சத்ரு சம்ஹார யாகம் நடைபெற்றது. 108 கிலோ மிளகு, 1,008 கிலோ மிளகாய் கொண்டு இந்த சிறப்பு யாகம் நடந்தது. தொடர்ந்து கோவில் வளாகத்தில் காலபைரவர் சிறப்பு அலங்காரத்தில் உலா வந்தார். இந்த சிறப்பு வழிபாட்டில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள், கர்நாடக மாநில பக்தர்கள் என திரளானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும் பெண் பக்தர்கள் பூசணியில் விளக்கேற்றி வழிபாடு செய்தனர்.

இதற்கான ஏற்பாடுகளை இந்துசமய அறநிலையத்துறை உதவி ஆணையர் உதயகுமார், கோவில் செயல் அலுவலர் ஜீவானந்தம், கோவில் அர்ச்சகர் கிருபாகரன் மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்