காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை:ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 11 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்புபரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் தடை

Update: 2023-09-02 19:30 GMT

பென்னாகரம்:

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்ததால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து நேற்று வினாடிக்கு 11 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. இதன் காரணமாக காவிரி ஆற்றில் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.

நீர்வரத்து அதிகரிப்பு

காவிரி மேலாண்மை வாரிய உத்தரவின் பேரில் கர்நாடக மாநிலத்தில் உள்ள கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைகளில் இருந்து மொத்தம் வினாடிக்கு 9 ஆயிரத்து 70 கனஅடி தண்ணீரை அந்த மாநில அரசு திறந்து விட்டுள்ளது. இதனிடையே நேற்று முன்தினம் ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 8 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது.

இந்த நிலையில் தமிழக நீர்ப்பிடிப்பு பகுதிகளான அஞ்செட்டி, நாட்றாம் பாளையம், பிலிகுண்டுலு, ஒகேனக்கல் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் கனமழை பெய்தது. இதன் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்தது. அதன்படி நேற்று காலை 10 மணி நிலவரப்படி வினாடிக்கு 11 ஆயிரம் கனஅடியாக நீர்வரத்து அதிகரித்தது.

பரிசல் இயக்க தடை

இதனால் மெயின் அருவி, ஐந்தருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. மேலும் காவிரி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்த நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்து உள்ளது. இதன் காரணமாக பரிசல்கள் காவிரி ஆற்றில் கவிழ்த்து வைக்கப்பட்டு இருந்தன. இதனிடையே நேற்று ஒகேனக்கல்லுக்கு வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்