மூங்கில்துறைப்பட்டு அருகே விற்பனையாளரை மாற்றக்கோரி ரேஷன் கடை முன்பு பொதுமக்கள் தர்ணா; சோப்பு உள்ளிட்ட பொருட்களை வாங்க வற்புறுத்துவதாக புகார்

மூங்கில்துறைப்பட்டு அருகே சோப்பு உள்ளிட்ட பொருட்களை கட்டாயப்படுத்தி வாங்க வற்புறுத்தும் விற்பனையாளரை மாற்றக்கோரி ரேஷன் கடை முன்பு பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.;

Update:2023-06-15 00:15 IST

மூங்கில்துறைப்பட்டு, 

ரேஷன் கடை

கள்ளக்குறிச்சி மாவட்டம் மூங்கில்துறைப்பட்டு அருகே பொரசப்பட்டு மேலப்பாக்கம் புதூர் கிராமத்தில் ரேஷன் கடை இயங்கி வருகிறது. இந்த கடையில் 800-க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்கி பயன் அடைந்து வருகிறார்கள். நேற்று காலை பொதுமக்கள் 50-க்கும் மேற்பட்டோர் பொருட்கள் வாங்க ரேஷன் கடைக்கு வந்தனர். அப்போது கடை விற்பனையாளர், பொதுமக்களிடம் அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய் வாங்கும் போது கூடுதலாக சோப்பு உள்ளிட்ட சில பொருட்களை வாங்க கட்டாயப்படுத்தியதாக கூறப்படுகிறது.

வாக்குவாதம்-தர்ணா

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், விற்பனையாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், ரேஷன் கடை முன்பு அமர்ந்து திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் மூங்கில்துறைப்பட்டு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோவன், தனிப்பிரிவு போலீஸ்காரர் சுந்தர் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள், கடை விற்பனையாளர் கட்டாயப்படுத்தி பொருட்களை விற்பனை செய்கிறார் எனவும், நாங்கள் வாங்கும் பொருட்களை விட கூடுதலாக வாங்கியதாக எங்களது செல்போன் எண்ணுக்கு குறுந்தகவல் வருகிறது. ஆகவே கடை விற்பனையாளரை மாற்ற வேண்டும் என போலீசாரிடம் புகார் தெரிவித்தனர்.

உரிய நடவடிக்கை

இதை கேட்ட போலீசார், இந்த விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதனை ஏற்றுக் கொண்ட பொதுமக்கள் தர்ணா போராட்டத்தை கைவிட்டு, அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்